Search This Blog

Wednesday, June 5, 2013

தன்னாட்சி: வளமான இந்தியாவை உருவாக்க

ஊழலுக்கு எதிரான அண்ணா ஹசாரேயின் இயக்கத்தின்மூலம் இந்தியா முழுதும் அறியப்பட்டவர் அர்விந்த் கெஜ்ரிவால். இப்போது ஆம் ஆத்மி கட்சி என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்திருக்கிறார். ஊழலை ஒழிக்க ஜன் லோக்பால் என்ற சட்டம் வேண்டும் என்ற அடிப்படையை முன்வைத்துப் போராடிய கெஜ்ரிவால், அது மட்டும் போதாது, கூடவே மக்களுக்குத் தன்னாட்சி அதிகாரம் வேண்டும் என்றும் சொல்கிறார்.

ஏன் ஊழல் நடக்கிறது என்பதை அழகாகப் பகுப்பாய்வு செய்து விளக்கும் கெஜ்ரிவால், இப்போது இருக்கும் அரசியல் அமைப்பினால் ஊழலை எவ்விதத்திலும் ஒழிக்க முடியாது என்பதை இந்தியாவில் நடக்கும் பல்வேறு விஷயங்களை ஆதாரமாக வைத்து விளக்குகிறார்.

ஊழலை ஒழிக்கவே முடியாதா? மக்களுக்கு நலத்திட்டங்கள் போய்ச் சேருமாறு செய்யமுடியாதா? மக்களை நிரந்தர ஏழைகளாக வைத்திருக்கும் அரசிடமிருந்து விமோசனமே கிடைக்காதா?

மாற்று வழிகள் உள்ளன என்கிறார் கெஜ்ரிவால். உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள மாற்று, இந்தியாவிலேயே சில கிராமங்களில் நடைபெற்றுள்ள சில சோதனைகள் என அனைத்தையும் எடுத்துக்காட்டும் கெஜ்ரிவால், எம்மாதிரியான சட்ட மாற்றங்களைக் கொண்டு மக்களுக்குத் தன்னாட்சி அதிகாரத்தைத் தரமுடியும் என்பதை அழகாக எடுத்துக்கூறுகிறார்.

இந்தப் புத்தகத்திலிருந்து ஒரு சிறு பகுதியைக் கீழே தருகிறோம். புத்தகத்தை வாங்க, இங்கே செல்லவும் அல்லது டயல் ஃபார் புக்ஸ் 94459-01234 என்ற எண்ணை அழைக்கவும்.

***

2002-ம் ஆண்டு மத்தியப் பிரதேசத்தில் பஞ்சாயத் ராஜ் சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டுவந்தார்கள். கிராம அரசாங்க ஊழியர் சரிவர வேலை செய்யவில்லை என்றால், கிராம சபை கூடித் தீர்மானம் எடுத்து அவரது சம்பளத்தை நிறுத்திவைக்கலாம் என்ற உரிமை அதில் இருந்தது. இதனால் சில ஆக்கப்பூர்வமான விளைவுகள் ஏற்பட்டன. அவற்றில் கொஞ்சம் இங்கே:

சிந்த்வாரா மாவட்டத்தின் அமர்வாடா கோட்டத்தில் சில கிராமங்களுக்குப் போயிருந்தோம். அங்கிருந்த பள்ளிகளில் ஆசிரியர்கள் முன்னர் பள்ளிகளுக்குச் சரியாக வரவில்லை என்று சொன்னார்கள். ஏறக்குறைய மாதத்தின் இறுதி நாளன்று வந்து சம்பளத்தை வாங்கிக் கொண்டு போவதுடன் சரி. சட்டத் திருத்தம் வந்தபிறகு, மக்கள் கூடிப் பேசி அவர்களின் சம்பளத்தை நிறுத்தி வைத்தார்கள். இரண்டு மாதத்துக்குச் சம்பளம் நிறுத்தப்பட்டதும், ஆசிரியர்கள் மூன்றாம் மாதத்திலிருந்து ஒழுங்காகப் பள்ளிக்கு வந்து பாடம் நடத்த ஆரம்பித்தார்கள். எவ்வளவு எளிதான தீர்வு பாருங்கள். மக்களிடம் அதிகாரத்தைக் கொடுங்கள், முன்னேற்றங்கள் வருகின்றன.

இன்னொரு கிராமத்தில் அங்கன்வாடிப் பணியாளர் சரிவரப் பணிக்கு வரவில்லை. ஒரு நாள் பஞ்சாயத்துத் தலைவர் கிராம சபையைக் கூட்டினார். சம்பந்தப்பட்ட பணியாளரையும் அழைத்தார். மக்கள் எல்லோர் முன்னிலையிலும் அந்தப் பெண்ணைத் தலைவர் கேட்டார்,
‘சொல்லுங்க, கடந்த ஆறு மாதங்கள்ள எத்தனை நாள் வேலைக்கு வந்தீங்க?’

ஒட்டுமொத்த கிராமத்தின்முன் அவரால் பொய் சொல்ல முடியவில்லை. இரண்டு நாட்கள்தான் என்பதை ஒப்புக்கொண்டார்.

‘இரண்டு நாட்கள்தான் என்றால் அங்கன்வாடி மையங்களுக்காக அரசாங்கம் அனுப்புகிற பணம் என்ன ஆயிற்று?’

அந்தப் பணத்தைத் தன் சொந்தச் செலவுக்கு உபயோகப்படுத்திவிட்டதை ஒப்புக்கொண்டார் அந்தப் பெண்.

இந்த முன்னேற்றங்கள் எல்லாம் மக்களுக்கு அதிகாரம் தரும் திருத்தம் கொண்டுவந்திருக்காவிட்டால் சாத்தியமாகி இருக்காது என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். அந்த அதிகாரம் இருந்திருக்காவிட்டால் வேலைக்கு வராத அங்கன்வாடி ஊழியரை அவர்களால் என்ன செய்திருக்க முடியும்?

அவருடைய மேலதிகாரிக்குப் புகார் அனுப்பியிருக்கலாம். பெரும்பாலும் இப்படிப்பட்ட புகார்கள் கிடப்பில் போடப்பட்டுவிடும். கொஞ்சம் நல்ல அதிகாரியாக இருந்தால் விசாரணைக் குழு ஒன்றை அமைத்திருப்பார். விசாரணை அதிகாரி சம்பந்தப்பட்ட கிராமத்துக்குப் போயிருப்பார்.
அங்கன்வாடி ஊழியரிடம் கையூட்டு பெற்றுக்கொண்டு அவரைப் பற்றி நல்ல விதமாக எழுதிக்கொடுத்திருப்பார்.

புகார்களுக்கு அர்த்தமே கிடையாது. புகார்கள் சமாளிக்கப்பட்டுவிடும். பின்னால் கிராம மக்கள் எதிர்ப்புக் குரல் எழுப்பிக்கொண்டே இருப்பார்கள். யார் அதைக் காதில் போட்டுக்கொள்வார்கள்?

மக்களுக்கு அதிகாரம் இருக்கிற காரணத்தால் விசாரணைக்கே அவசியம் இருக்கவில்லை. சம்பந்தப்பட்ட ஊழியர், குற்றங்களை நேரடியாக ஒப்புக்கொள்ளவேண்டிய நிலைக்கு ஆளாகியிருக்கிறார். குற்றம் ஒப்புக்கொள்ளப்பட்டதும் சில இளைஞர்கள் எழுந்து அவர் வேலையிலிருந்து நீக்கப்படவேண்டும் என்று கோரியிருக்கிறார்கள். ஆனால் சில பெரியவர்கள் எழுந்து, அவரை வேலையிலிருந்து நீக்குவது நம் நோக்கமில்லை என்றும் அவர் தன்னை மாற்றிக்கொள்ளவேண்டும் என்பதே நம் நோக்கம் என்று சொல்லியிருக்கிறார்கள். பத்து நாள் அவகாசம் கொடுத்து, அதற்குள் அவர் தன் நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ளாவிட்டால் கிராம சபை கூடி அவரை வேலையிலிருந்து நீக்கும் என்றும் சொல்லியிருக்கிறார்கள்.

அந்தப் பெண் தன் நடவடிக்கைகளை மாற்றிக்கொண்டார். அவரை நீக்கவேண்டிய அவசியம் எழவில்லை.

***

தன்னாட்சி: வளமான இந்தியாவை உருவாக்க
அர்விந்த் கெஜ்ரிவால்
தமிழில்: கே.ஜி.ஜவர்லால்
இணையத்தில் வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-750-3.html
தொலைபேசி மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 94459-01234

3 comments:

  1. நூலும் நல் வரவு. மொழிபெயர்ப்பும் நல்வரவு. இது பற்றி நானும் திரு.கெஜ்ரிவாலும் மடலாடியிருக்கிறோம். சுருங்கச்சொல்லின், விழிப்புணர்ச்சி தான் வினாவும் விடையும். இந்தியாவில் பிரதிநித்துவ ஜனநாயகத்துடன், இங்கிலாந்து மக்கள் ஆலோசனை மையத்தையும் கொடுத்திருக்கவேண்டும்.

    ReplyDelete
  2. முற்காலத்தில் நமது நாட்டில் இருந்த கிராம பஞ்சாயத்து முறைதான் இது.
    எந்த ஒரு முறையும் அடையும் க்ஷீண நிலையை அந்த முறையும் அடைந்தது. நாளாவட்டத்தில் கட்டைப் பஞ்சாயத்தாக மாறியது. ஊர் முன்னிலையில் ஆடைகளைதல், எல்லோர் காலிலும் விழுந்து மன்னிப்புக் கேட்டல் என்ற வகையில் மாறிப்போனது.

    சாதி உணர்வுகளால் பிணைப்புண்ட சமுதாயத்தில் விசாரணைக்கு ஆட்படுபவருடைய சாதிக்காரர்கள் அவரை அரவணைத்துக் காப்பாற்றுவார்கள்.
    மேலும் பெரும்பான்மை சாதி, மதக்கூட்டத்தார் உள்ள ஓர் இடத்தில் பிற குறைந்த எண்ணிக்கையால் ஆன‌ சாதி, மதக்காரர்ர்களுக்கு நீதி கிடைக்க என்ன பாதுகாப்பை கேஜ்ரிவால் சொல்கிறார்?

    அது போலவே மக்கள் நேரடியாகக் கூடும் கூட்டத்தில் வன்முறை வெடிக்காமல் இருக்க என்ன ஏற்பாடு?

    ReplyDelete
  3. மாநிலத்திற்கு தன்னாட்சி அதிகாரத்தை பற்றி இதில் பேசப் பட்டுள்ளதா ? இந்தியாவில் சிக்கியுள்ள தேசிய இனங்கள் விடுதலை பெறாமல் அவர்களுக்கு தன்னாட்சி அதிகாரம் கிடைக்காமல் ஊழலை மட்டுமல்ல எந்த பிரச்சனையையும் முடிவுக்கு கொண்டு வர முடியாது எனது நம் கருத்து. அரவிந்த் சொல்கிறாரோ இல்லையோ தமிழர்களின் அடுத்த கட்ட நகர்வு என்பது தமிழக தன்னாட்சியை நோக்கித் தான்.

    ReplyDelete