Search This Blog

Monday, June 10, 2013

தமிழக அரசியல் வரலாறு - இரு பாகங்கள்

ஆர். முத்துக்குமார் எழுதிய தமிழக அரசியல் வரலாறு நூலில் இருந்து ஒரு பகுதி கீழே. முதல் பாகம், சுதந்தரம் தொடங்கி எமர்ஜென்ஸி வரையிலும், இரண்டாவது பாகம் எம்ஜிஆர் ஆட்சிக்காலம் தொடங்கி 2000 வரையிலுமான காலகட்டத்தையும் ஆராய்கிறது.

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க :

பாகம் ஒன்று
பாகம் இரண்டு

ஃபோன் மூலம் வாங்க, டயல் ஃபார் புக்ஸ் 94459-01234

0

இந்தியாவில் இந்திக்கு அடுத்தபடியாக அதிகம் பேசப்படும் பிராந்திய மொழி தெலுங்கு. அதில் தெலுங்கர்களுக்கு பெருமை, பெருமிதம். அந்த அடிப்படையில் தங்களுக்கென்று தனி மாநிலம் வேண்டும் என்று நீண்டகாலமாகப் போராடிக் கொண்டிருந்தனர். மொழிவாரி மாகாணப் பிரிப்புக்கு ஆந்திரர்கள் வைத்ததுதான் ஆரம்பப்புள்ளி.

சென்னை மாகாண முதல்வராக இருந்த டி. பிரகாசத்துக்கு ஆந்திரப் பிரிவினையில் அதிகபட்ச ஆர்வம். முதல்வராக இருந்தபோதே ஆந்திரர்களுக்கு ஆதரவாகப் பாரபட்சத்துடன் நடந்துகொண்டார் என்ற விமரிசனம் அவர்மீது இருந்தது. ஆனாலும் ஆந்திரப் பிரிவினையில் அவர் எந்தவித சமரசத்தையும் செய்துகொள்ளவில்லை. ஆந்திரக் கேசரி என்று அவரைக் கொண்டாடியதற்கும் அதுதான் காரணம்.

விண்ணப்பம். மனு. கோரிக்கை. எதுவும் பலன் கொடுக்காததைத் தொடர்ந்து ஆந்திரப் பிரிவினையை முன்வைத்து உண்ணாவிரதம் இருக்க முடிவுசெய்தார் ஆந்திரப் பகுதியைச் சேர்ந்த சீதாராம். இவர் அரசியல்வாதியாக இருந்து சாமியாராக அவதாரம் எடுத்தவர். ஐந்து வார காலத்துக்கு நீடித்தது சீதாராமின் உண்ணாவிரதம். பிறகு வினோபா பாவேயின் தலையீட்டால் உண்ணாவிரதம் முடிவுக்கு
வந்தது. எந்தப் போராட்டத்துக்கும் பிரதமர் நேரு அசைந்துகொடுக்கவில்லை.

ஆந்திரர்களின் கோபம் வெடித்தது. அது 1952ல் நடந்த முதல் பொதுத்தேர்தலில் தெறித்தது. ஆந்திரப் பகுதிகளில் பிரிவினை கோஷமே தேர்தல் பிரச்னையாக முன்வைக்கப்பட்டது. ஆந்திர கோரிக்கையைக் கண்டுகொள்ளாத நேரு பிரசாரத்துக்கு வந்தபோது கறுப்புக் கொடிகளை எதிர்கொண்டார். தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் கட்சிக்கு பலத்த அடி. ஆந்திரப் பிரிவினையை வலியுறுத்திய கட்சிகளின் கழுத்தில் வெற்றிமாலைகள். சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் கட்சிக்குப் பெரும்பான்மை கிடைக்காமல் போனதற்கு இதுவும் ஒரு காரணம்.

தேர்தலுக்குப் பிறகு ஆந்திர கோரிக்கை மேலும் வலுவடைந்தது. மீண்டும் சுவாமி சீதாராமே களமிறங்கினார். தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். இளைஞர்களே, ஆந்திராவுக்காக உயிரைக்கொடுக்கத் தயாராகுங்கள் என்றார். சென்னை மாகாண சட்டமன்றத்தில் இருக்கும் தெலுங்கு பேசும் உறுப்பினர்கள் சபையைப் புறக்கணியுங்கள். சாலைக்கு வந்து போராடுங்கள் என்றார். கட்சி என்ன சொல்கிறது, நேரு என்ன சொல்கிறார் என்பது பற்றித் துளியும் கவலைப்படாமல் ஆந்திரப் பகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பிரிவினை கோஷம் எழுப்பினர். தெலுங்கானா விஷயத்தில் இன்று நடப்பதுதான் அன்றும் நடந்தது.

சிக்கல் என்னவென்றால் ஆந்திரப் பிரிவினையில் தீர்மானிக்கும் சக்திகளாக இருந்த நேரு, ராஜாஜி இருவருமே ஆந்திரப் பிரிவினைக்கு எதிரானவர்கள். ஆகவே, ஆந்திரர்களுக்கும் எதிரிகளானார்கள். உச்சக்கட்டமாக, ஆந்திரப் பகுதிக்குச் சுற்றுப்பயணம் சென்ற ராஜாஜி மீது தார் வீசப்பட்டது. அதற்கு ராஜாஜியின் எதிர்வினை சுவாரஸ்யமானது. தாரைக் கொண்டு ஆந்திராவை உருவாக்கமுடியும் என்று நம்பினால் அய்யோ பாவம்!

பிரிவினைப் போராட்டங்கள் நாளுக்கு நாள் சூடுபிடித்தன. உச்சக்கட்டமாக உண்ணாவிரதம் தொடங்கினார். சுவாமி சீதாராம் அல்ல; இன்னொருவர். பெயர், பொட்டி ஸ்ரீராமுலு. ஆந்திரப் பகுதியைச் சேர்ந்த இவருக்கு ஆந்திரப் பிரிவினையில் அதிக நாட்டம். சுவாமி சீதாராமின் ஆசியுடன் 19 அக்டோபர் 1952 அன்று சென்னையில் உண்ணாவிரதம் தொடங்கினார். செய்திகள் கசியத் தொடங்கவே ஆந்திரப் பகுதிகளில் எழுச்சி ஏற்பட்டது. ஏராளமான ஆந்திரர்கள் ஸ்ரீராமுலுவுக்கு ஆதரவு கொடுத்தனர். மணி, நாள், வாரம் என்று எந்தவித இலக்குகளையும் ஸ்ரீராமுலு நிர்ணயித்துக் கொள்ளவில்லை. ஒரே இலக்கு, ஆந்திர தேசம் அல்லது மரணம். ஆறு வாரங்களைக் கடந்தும் உண்ணாவிரதம் நீடித்தது. ஸ்ரீராமுலுவின் உடல்நிலை மோசமடைந்தது.

விஷயம் பிரதமர் நேருவுக்கும் சென்றது. உண்மைகளால் மட்டுமே பிரச்னைகளைத் தீர்க்கமுடியும், உண்ணாவிரதங்களால் அல்ல என்பது நேருவின் வாதம். ஆகவே உண்ணாவிரதத்தைப் பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. ஆந்திராவுக்காக ஏதோ ஒரு உண்ணாவிரதம் நடக்கிறதாம். தந்திகள் வருகின்றன. அந்தப் பிரச்னையை நான் முற்றிலுமாகக் கவனிக்கப் போவதில்லை என்று ராஜாஜிக்குக் கடிதம் எழுதினார் நேரு.

உடல்நிலை பலவீனமடைந்த நிலையிலும் உண்ணாவிரதம் தொடர்ந்தது. போராட்டத்துக்கான ஆதரவு பெருகியது. ஆந்திர இளைஞர்கள் சாலைக்கு வந்தனர். மாணவர்களும் வந்துசேர்ந்தனர். எந்நேரமும் வன்றை வெடிக்கலாம். ஏதோ ஒரு உண்ணாவிரதம் என்று நினைத்த நேருவின் மனத்துக்குள் முதன்முறையாக பயம் எட்டிப்பார்த்தது. வன்முறைகளைத் தவிர்க்கவேண்டும், என்ன விலை கொடுத்தாவது. எனில், அது ஏன் ஆந்திரப் பிரிவினையாக இருக்கக்கூடாது?

நேருவின் மனம் பிரிவினைக்குத் தயாராகியிருந்தது. உடனடியாக ராஜாஜிக்குக் கடிதம் எழுதினார் நேரு. ஆந்திரப் பிரிவினைக்கு அவசியம் வந்துவிட்டது என்பதுதான் கடிதத்தின் சாரம். தூக்கிவாரிப்போட்டது ராஜாஜிக்கு. ஆந்திரப் பிரிவினையின் தீவிர எதிர்ப்பாளர் அவர். ஆம். இந்தியாவில் இருந்து பாகிஸ்தானைப் பிரித்துக்கொடுப்பதுதான் நியாயம் என்று போராடிய ராஜாஜிதான்; பிரிவினைக்கான காரியங்களை முன்னின்று செய்து காங்கிரஸ்காரர்கள் சிலரின் அதிருப்தியைச் சம்பாதித்துக் கொண்ட
அதே ராஜாஜிதான். காலம் மாறியிருந்தது; ராஜாஜியும் மாறியிருந்தார். பாகிஸ்தானுக்கு வாசல் திறந்துவிட்ட ராஜாஜி, ஆந்திரப் பிரிவினைக்குத் தடுப்புச்சுவராக நின்றுகொண்டிருந்தார்.

பிரிவினைக்குத் தயாராகியிருந்த பிரதமர் நேருவை அமைதிப்படுத்தும் வகையில் கடிதம் ஒன்றை எழுதினார் ராஜாஜி. அவசரம் வேண்டாம். முதலில் பேச்சுவார்த்தை நடத்தலாம். பொட்டி ஸ்ரீராமுலுவின் உண்ணாவிரதத்தைப் பின்னால் நின்று இயக்குபவர் சுவாமி சீதாராம். அவரை உடனடியாக டெல்லிக்கு அழைத்துப் பேசுங்கள். நிச்சயம் சூழ்நிலை மாறும். ஆந்திர இளைஞர்கள் எளிதில்  உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். கவனம். இதுதான் நேருவுக்கு ராஜாஜி கொடுத்த யோசனை.

கடிதத்தைப் படித்துவிட்டுக் காரியத்தில் இறங்குவதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது. ஆந்திராவுக்காக அன்னம் தொடாமல் ஐம்பத்தெட்டு நாட்களுக்கு உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய பொட்டி ஸ்ரீராமுலு 15 டிசம்பர் 1952 அன்று கனவுகளைக் கண்களில் ஏந்தியபடியே மரணம் அடைந்தார். ஒட்டுமொத்த ஆந்திராவையும் உலுக்கிப் போட்டது அந்த மரணச் செய்தி. அடுத்தது என்ன நடக்குமோ என்று எல்லோருமே நடுங்கினர், நேரு உள்பட.

மரணத்துக்கான எதிர்வினைகள் பலமாகக் கேட்டன. நேரு பயந்தது நடந்தது. ராஜாஜி எச்சரித்ததும் நடந்தது. ஆந்திரா கொந்தளித்தது. பயங்கர வன்முறை. ஆந்திரப் பகுதி பற்றி எரிந்த 19 டிசம்பர் 1952 அன்று இந்திய நாடாளுமன்றம் கூடியது. பிரதமர் நேரு பேசினார். அந்தப் பேச்சில் இரண்டு விஷயங்கள் இருந்தன. ஆந்திர மாநிலம் விரைவில் உருவாகும். ஆந்திராவின் தலைநகர் எது, உயர்நீதிமன்றத்தை எங்கே அமைப்பது என்பது பற்றி ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதி வாஞ்சு ஆய்வு செய்து முடிவெடுப்பார். வருத்தம் தோய்ந்த முகத்துடன் அறிவிப்பை வெளியிட்டார் நேரு. அப்போது அவர் சொன்ன வார்த்தைகள் முக்கியமானவை. குளவிக் கூட்டைக் குலைத்து விட்டோம்; இனி நம்மில் பலர் கடுமையாகக் கொட்டப்படுவோம். அதுதான் நடந்தது.

தனி ஆந்திராவை மட்டும் அவர்கள் கோரவில்லை. புதிய மாநிலத்தின் தலைநகராக சென்னைதான் இருக்கவேண்டும் என்று அடம் பிடித்தனர். மதராஸ் மனதே! என்ற கோஷத்தையும் சேர்த்து எழுப்பினர்.
சென்னை நகரை முற்றிலுமாக ஆந்திராவுடன் இணைக்க வேண்டும். இல்லாவிட்டால் கூவம் நதியை மையமாகக் கொண்டு சென்னையை வடசென்னை, தென் சென்னை என்று பிரிக்கவேண்டும். வட சென்னையை ஆந்திராவுக்குக் கொடுத்துவிடவேண்டும். அதுவும் முடியாது என்றால் சென்னை நகரை இரண்டு மாநிலங்களுக்கும் பொதுவான தலைநகராக அறிவிக்கவேண்டும். மேற்கண்ட எதற்குமே வாய்ப்பு இல்லாத பட்சத்தில் சென்னை எங்களுக்கும் வேண்டாம், அவர்களுக்கும் வேண்டாம். தன்னாட்சி பெற்ற பகுதியாக அறிவித்துவிடுங்கள் என்று அறிக்கை வெளியிட்டார் டி. பிரகாசம்.

ஆந்திர கேசரி வெளியிட்ட அந்த அறிக்கை குழப்பத்தின் உச்சம். ஆந்திர கோரிக்கையில் இருந்த நியாயம் சென்னை கோரிக்கையில் இல்லை என்பது அறிக்கையில் அப்பட்டமாகத் தெரிந்தது. முழுதும் வேண்டும் அல்லது பாதியாவது வேண்டும் என்றெல்லாம் கூறி வீம்புக்கு கோரிக்கை வைத்தனர். வீம்புக்குப் பதிலடி கொடுக்க புதிய கோஷம் ஒன்று ஒலித்தது. தலையைக் கொடுத்தாவது தலைநகரைக் காப்போம்! உபயம்: மயிலாப்பூர் பொன்னுச்சாமி சிவஞானம் என்கிற ம.பொ. சிவஞானம்.

சென்னை கோரிக்கையை ஆந்திரர்கள் எழுப்பியதால் தமிழர்கள் திருப்பதி வேண்டும் என்று கோஷத்தை உரக்க எழுப்பிப் போராடத் தொடங்கினர். திருப்பதி மட்டுமல்ல, திருவாலங்காடு, கனகம்மா சத்திரம், திருத்தணி, புத்தூர் நகரி, ஏகாம்பரக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளும் ஆந்திரப் பகுதிக்குச் சென்றுவிட்டன. அவை அனைத்தையும் மீட்டெடுக்கும் நோக்கத்துடன் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார் ம.பொ.சி.

சென்னை நகரை எந்தக் காரணத்தை முன்னிட்டும் விட்டுத்தர முடியாது என்று சொன்ன ம.பொ.சி, தொடர்ச்சியாகப் போராட்டங்கள் நடத்தினார். அவற்றுக்குப் பலத்த ஆதரவு கிடைத்தது. முக்கியமாக, முதல்வர் ராஜாஜியிடம் இருந்து. எனினும், நேரு இறங்கிவந்துவிட்டதால் ராஜாஜியும் இறங்கி வரவேண்டிய சூழல். எனினும், சென்னை நகரை ஆந்திரர்கள் கோரியது முதல்வர் ராஜாஜியை ஆத்திரப்படுத்தியது. ஆனாலும் அமைதியாக ஆலோசனை ஒன்றைக் கொடுத்தார்.

ஒரு அறையில் இருந்து வெளியேற முடிவுசெய்து விட்டபிறகு அங்குள்ள தூணைப் பிடித்துக் கொண்டால் ஒருகாலத்திலும் அங்கிருந்து வெளியேற முடியாது!

ஆந்திர மாநிலம் அமைக்கப்படும் என்று அறிவித்தபிறகும் தலைநகர் பிரச்னை உருவானதை நேரு ரசிக்கவில்லை. 25 மார்ச் 1953 அன்று நாடாளுமன்றத்தில் பேசிய நேரு, 1 அக்டோபர் 1953 அன்று புதிய ஆந்திர மாநிலம் அமையும்; அதன் தலைநகர் ஆந்திர நாட்டின் எல்லைக்கு உள்ளேயே இருக்கும் என்றார். இதன் அர்த்தம், சென்னை நகரம் தமிழ்நாட்டுக்கே சொந்தம், ஆந்திராவுக்கு அல்ல!

1 அக்டோபர் 1953 அன்று தாற்காலிகத் தலைநகரான கர்நூலில் புதிய ஆந்திர மாநிலத் தொடக்க விழா நடந்தது. விழாவுக்கு வந்த சிறப்பு விருந்தினர்கள் இருவருமே ஆந்திரர்களின் ஆகப்பெரிய எதிரிகள். நேரு மற்றும் ராஜாஜி. விண்ணப்பத்தில் தொடங்கி உண்ணாவிரதத்தில் வளர்ந்து வன்முறையில் உதித்துவிட்டது புதிய ஆந்திர மாநிலம்!

0

தமிழக அரசியல் வரலாறு
ஆர். முத்துக்குமார்
தொலைப்பேசி வழியாக வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 94459-01234

No comments:

Post a Comment