Search This Blog

Wednesday, August 21, 2013

தன்னாட்சி : வளமான இந்தியாவை உருவாக்க

தன்னாட்சி : வளமான இந்தியாவை உருவாக்க
அர்விந்த கெஜ்ரிவால்
பக் : 120
விலை : 80/-



இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க

புத்தகத்திலிருந்து...


வருமான வரித்துறையில் நான் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். 1990களின் இறுதியில் அந்தத் துறை பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் பற்றிய ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அப்போது பல நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்துகொண்டிருந்தது தெரியவந்து, அவர்கள் கையும் களவுமாகச் சிக்கினார்கள். குற்றத்தை ஒப்புக்கொண்டு, எந்த வேண்டுகோளும் கோரிக்கைகளும் முன் வைக்காமல் கட்ட வேண்டிய வரி பாக்கி மொத்தத்தையும் கட்டினார்கள். இது வேறு எந்த நாட்டில் நடந்திருந்தாலும் அந்த நிறுவனங்களின் முதன்மை நிர்வாகிகள் சிறைக்கு அனுப்பப்பட்டிருப்பார்கள்.
பிடிபட்ட நிறுவனம் ஒன்றின் தலைவர், வெளிநாட்டுக்காரர், வருமான வரித் துறையின் குழுவினருக்கு மிரட்டல் விடுத்தார்.
இந்தியா ஏழை நாடு. உங்களுக்கு உதவுவதற்காக உங்கள் நாட்டுக்கு வந்திருக்கிறோம். எங்களுக்கு இந்த மாதிரி தொந்தரவுகள் கொடுத்தால் நாங்கள் போய்விடுவோம். எங்களுடைய பலம் எப்படிப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியாது. எங்களுக்குச் சாதகமான சட்டத்தை உங்கள் நாடாளுமன்றமே நிறைவேற்றுகிற மாதிரி எங்களால் செய்ய முடியும். உங்களை எல்லாம் பணியிட மாற்றம் செய்து வேறு இடங்களுக்குக்கூட எங்களால் அனுப்ப முடியும்.
இது நடந்து சில நாட்களில் எங்கள் குழுவில் இடம் பெற்றிருந்த மூத்த அதிகாரி ஒருவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அப்போதும் நான் அவர் சொன்ன வார்த்தைகளுக்கு அர்த்தம் இருந்ததாக நினைக்கவில்லை. வருமான வரித் துறையின் ஆய்வில் எரிச்சல் அடைந்ததால் அவர் அப்படிப் பேசினார் என்றுதான் நினைத்தேன். ஆனால் கடந்த சில ஆண்டுகளில் நடந்தேறியிருக்கும் நிகழ்ச்சிகள் அவர் சொன்னவற்றை நம்ப வைக்கின்றன. இப்போது நான் என்னையே கேட்டுக்கொள்கிறேன்: வெளிநாட்டுச் சக்திகள் நம் நாடாளுமன்றத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனவா?’
ஓர் உதாரணம் சொல்கிறேன்.
2008ல் மத்திய அரசுக்குத் தன் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கவேண்டிய அவசியம் வந்தது. எம்.பி.க்களுடன் பேரம் நடப்பதாக வதந்திகள் வந்தன. சில தொலைக்காட்சி சானல்கள் அப்படிப்பட்ட பேரங்கள் நடப்பதைக் காட்டவும் செய்தன. அது நாட்டையே ஆணி வேர் வரை அசைத்தது. எம்.பி.க்கள் இப்படி விலை போக ஆரம்பித்தால் நம்முடைய வாக்குகளுக்கு என்ன மரியாதை?
நாளைக்கே அவர்களை அமெரிக்காவோ, பாகிஸ்தானோ அல்லது வேறு எந்த நாடோ விலைக்கு வாங்கலாம். யார் கண்டது, அப்படி ஏற்கெனவே நடந்தும்கூட இருக்கலாம். நாமெல்லாம் ஒரு சுதந்தர நாட்டின் குடிமக்கள்தானா? நம் நாடாளுமன்றம் நம் மக்களின் நன்மைக்குத்தான் சட்டதிட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்தி வருகிறதா? இந்த எண்ணம் ஏற்பட்டு எனக்கு நடுக்கம் உண்டாயிற்று.
அணுசக்தி அழிவு இழப்பீட்டுச் சட்டம் 2010 பற்றிச் செய்தித்தாள்களில் படித்தபோது என் அச்சம் அர்த்தமற்றதல்ல என்று தோன்றியது. ஒரு வெளிநாட்டு நிறுவனம் இந்தியாவில் அணு மின் நிலையம் தொடங்கி, அதில் விபத்து நிகழ்ந்தால், நிறுவனம் வழங்கும் இழப்பீட்டுத் தொகை அதிகபட்சம் ரூ. 1,500 கோடியாக இருந்தால் போதுமானது என்கிறது இந்தச் சட்டம் (6(2)(ச்)). உலகில் எப்போதெல்லாம் அணு விபத்துக்கள் நேரிட்டனவோ அப்போதெல்லாம் ஆயிரக்கணக்கில் இறந்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான கோடிகளில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

போபால் விஷவாயு விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு இதுவரை ரூ. 220 கோடி நஷ்ட ஈடு தரப்பட்டுள்ளது. இது போதுமானதல்ல என்ற கருத்து நிலவுகிறது. இதை வைத்துப் பார்க்கும்போது ரூ. 1,500 கோடி என்பது குறைவுதான். ஓர் அணு விபத்து என்பது எத்தனை போபால் விபத்துகளுக்குச் சமம்? மேலும், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின்மீது வழக்கு பதிவு செய்யப்படாது என்று இந்தச் சட்டம் சொல்கிறது. 

No comments:

Post a Comment