Search This Blog

Wednesday, August 7, 2013

அமெரிக்க உளவாளி


அமெரிக்க உளவாளி
அ.முத்துலிங்கம்
பக் : 288
விலை : 285/-




இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க

2009ம் ஆண்டு நடுப்பகுதியில் சில நண்பர்களின் தூண்டுதலில் அ. முத்துலிங்கம் தனக்கான இணையதளத்தை ஆரம்பித்திருக்கிறார். அவ்வப்போது மனதில் தோன்றியதை நாட்குறிப்புகள் போலப் பதிந்துவந்திருக்கிறார். கட்டுரைகள், சிறுகதைகள் என பல வடிவங்களில் எழுதப்பட்ட அவை பத்திரிகைகளிலும் இணையத்திலும் வெளியாகியுள்ளன. அந்தப் படைப்புகளின் தொகுப்பே இந்தப் புத்தகம்.

சுவாரசியமான நடை, பரந்து விரிந்த அனுபவக் களங்கள், அபாரமான எழுத்தாளுமை எனப் பல  சிறப்பம்சங்கள் கொண்ட  அ. முத்துலிங்கத்தின் முக்கியமான தொகுப்பு.

புத்தகத்திலிருந்து....

விருந்துக்கு என்னையும் அழைத்துப் போகும்படி நண்பனிடம் கேட்டேன். அவன் மறுத்துவிட்டான். அப்பொழுது நான் வாசிங்டனில் சில நாள்களை விடுமுறையில் கழிப்பதற்காகப் போய் தங்கியிருந்தேன். என்னுடைய முகம் அப்படி விழுந்துபோகும் என்று நண்பன் எதிர்பார்க்கவில்லை. சரி சரி அவர்களிடம் பேசிவிட்டுச் சொல்கிறேன்என்றான். எனக்கு உடனேயே கூச்சம் வந்தது. ஐஸ்கிரீம் வண்டியைத் துரத்திச் சென்ற சிறுவனிடம் ஐஸ்கிரீம்காரர் முடிந்துவிட்டதுஎன்று சொன்னது போல எனக்கு பெரிய ஏமாற்றமாகப் போய்விட்டது. அந்த ஏமாற்றத்தை மறைப்பது ஆகப் பெரிய சவாலாகவும் ஆனது.
எனக்கு ஒருவிதத்திலும் சம்பந்தம் இல்லாத விருந்து அது. என்னுடைய நண்பருடன் வேலை செய்யும் அமெரிக்கப் பெண்ணுக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயமாகியிருந்தது. மூன்று வருடமாகக் காதலித்தவளுக்கு இப்பொழுதுதான் காதலன் ஒரு மோதிரத்தைக் கொடுத்து காதலை உறுதிப்படுத்தியிருந்தான். அடுத்து திருமணம்தான். இந்தக் காதலர்களுக்கு வாழ்த்து சொல்கிற மாதிரி அந்தப் பெண்ணின் அலுவலகத்தைச் சேர்ந்த சில நண்பர்கள் விருந்து ஏற்பாடு செய்திருந்தார்கள். இந்த விருந்துக்குத்தான் நான் போகவேண்டுமென்று விரும்பினேன். காரணம் நண்பர் போகிறபோக்கில் சொன்ன ஒரு தகவல்தான். அந்தக் காதலன் வேலை செய்வது சி.ஐ.ஏ ( Central Intelligence Agency) நிறுவனத்தில். அதாவது அமெரிக்காவின் மைய உளவுத்துறையில். என்னுடைய ஆர்வம் அதுதான். நான் என் வாழ்க்கையில் அமெரிக்க உளவுத்துறை அதிகாரி ஒருவரைச் சந்தித்தது கிடையாது.   இனிமேல் சந்திப்பேன் என்பதும் நினைத்துப்பார்க்க முடியாத ஒன்று.
உளவுத்துறை பற்றி நான் அறிந்தது எல்லாம் புத்தகத்தில் படித்ததுதான். மீதியை அமெரிக்க சினிமாவில் பார்த்துத் தெரிந்துகொண்டேன். சினிமாவில் நான் பார்த்த துப்பறிவாளர்கள் எல்லாம் மனத்தில் திகில் எழுப்பக்கூடியவர்கள். அவர்கள் சாகசங்கள் மெய் சிலிர்க்க வைக்கும். சிறுவயதில் படித்தது சங்கர்லால். அவர் சத்தம் எழுப்பாத மெல்லிய ரப்பர் சூக்களை அணிந்தபடி நாலு மாடிக் கட்டடங்களில் அனாயாசமாகப் பாய்ந்து ஏறிவிடுவார். அடுத்து படித்து வியந்தது வந்தியத்தேவன். இவன் தைரியசாலி. வாய் திறந்தான் என்றால் புதுப்புது பொய்களை அந்தக் கணமே உண்டாக்கிவிடுவான். ஆனால் அவன் புத்திசாலியல்ல; மூடத்தனம் கூடியவன். அவன் கண்டுபிடித்தது எல்லாம் தற்செயலாகத்தான் நடந்தது. ஆகவே நவீன துப்பறிவாளன் என்ன செய்வான், எப்படி திட்டமிடுவான், எப்படி செயல்வடிவம் கொடுப்பான் என்பதையெல்லாம் நேருக்கு நேர் நான் அறியத் துடித்தது இயற்கையானது.
பின்னேரம் அலுவலகத்திலிருந்து திரும்பிய நண்பர் சரி, பிரச்னை இல்லைஎன்றார். அப்படித்தான் ஒரு சனிக்கிழமை மாலை நடந்த விருந்துக்கு என்னை அழைத்துப்போனார். போகும் வழியில் காரில் நண்பரிடம் அந்த சி.ஐ.ஏ அதிகாரிக்குப் பக்கத்தில் எனக்கு ஓர் ஆசனம் பிடித்துத் தரும்படிக் கேட்டுக்கொண்டேன். அந்த உளவாளியிடமிருந்து அத்தனை விசயங்களையும் ஆகக் குறைந்த நேரத்தில் உறிஞ்சிவிடவேண்டும் என்பது என் திட்டம். நண்பரும் ரோட்டைப் பார்த்தபடி சரி என்று தலையாட்டினார். ஆனால் விருந்து நடந்த இடத்துக்குப் போய்ச் சேர்ந்தபோது எனக்கு பெரும் ஏமாற்றம்தான் மிஞ்சியது. அங்கே ஆசனங்களே இல்லை, அது ஒரு கொக்ரெய்ல் விருந்து என்று சொன்னார்கள். நீண்ட நீண்ட கிளாஸ்களில் பானங்களை நிறைத்துக்கொண்டு கிரகங்கள் சுற்றுவதுபோல சுற்றிக்கொண்டிருந்தார்கள். பரிசாரகனிடம் எனக்கு வேண்டிய பானத்தைக் கூறினேன். அவன் கீழே அகன்று, மேலே வாய் ஒடுங்கிய கிளாஸ் ஒன்றில் பானத்தை ஊற்றி அதே அளவு ஐஸ் கட்டிகளை மிதக்கவிட்டு அதற்குமேலே ஒரு மென்சிவப்பு குடையை விரித்து வைத்து என்னிடம் நீட்டினான்.

நண்பன் நான் கேட்டதை மறக்கவில்லை. முதல் வேலையாக என்னை அழைத்துப்போய் தன்னுடன் வேலை செய்யும் அமெரிக்கப் பெண்ணை அறிமுகப்படுத்தினான். முற்றிலும் மென்சிவப்பு வர்ணத்தில் அவள் இருந்தாள். அவளாகவே தான் மணமுடிக்கப் போகும் சி.ஐ.ஏ அதிகாரியிடம் என்னை அறிமுகம் செய்துவிட்டு மறைந்துபோனாள். முப்பது வயது மதிக்கத்தக்க உயரமான ஆள். சதுரமான முகம், சதுரமான உடம்பு. என்னுடைய கைகளைக் குலுக்கியபோது முறிந்து விழுந்துவிடும்போல இருந்தது. ஒரு ஜேம்ஸ் பொண்டின் உருவத்தை மனத்திலே சித்தரித்து வைத்திருந்த எனக்கு அவருடைய உடலமைப்பும், முக வெட்டும், சொண்டுக்குள் மறைந்திருந்த சிரிப்பும் அப்படியே பொருந்திப் போனது. ஆனால் அதற்குப் பிறகு நடந்ததுதான் நான் எதிர்பாராதது.

No comments:

Post a Comment