Search This Blog

Monday, February 25, 2013

இரா. முருகனின் விஸ்வரூபம் நாவல் வெளியீட்டு விழா


இரா. முருகனின் விஸ்வரூபம் நாவல் வெளியீட்டு விழா.

நாள்: மார்ச் 2, 2013, சனிக்கிழமை.
நேரம்: மாலை 6-8 மணி வரை.
இடம்: ஆர்க்கே கன்வென்ஷன் செண்டர், மயிலாப்பூர்.

இடத்தின் வரைபடம்:




Tuesday, February 19, 2013

பிரபல கொலைவழக்குகள் புத்தகத்தில் இருந்து ஒரு பகுதி

பிரபல கொலை வழக்குகள்
ஆசிரியர்: SP. சொக்கலிங்கம்

நூலாசிரியரைப் பற்றி: சென்னை உயர் நீதிமன்றத்தில் 15 ஆண்டுகளாக வழக்கறிஞராக இருக்கிறார். அறிவுசார் சொத்துரிமை தொடர்பான வழக்குகளில் தனிகவனம் செலுத்தி வருகிறார். ‘மெட்ராஸ் லா ஜர்னல்’ எனும் சட்ட இதழில் அறிவுசார் சொத்துரிமை குறித்து கட்டுரை எழுதி வருகிறார். தொழில், வர்த்தகம் சம்பந்தப்பட்ட கூட்டங்களில் விரிவுரையாற்றி வருகிறார்.





உள்ளே...

    முன்னுரை
1. ஆஷ் கொலை வழக்கு
2. சிங்கம்பட்டி கொலை வழக்கு
3. பாவ்லா கொலை வழக்கு
4. பகூர் கொலை வழக்கு
5. லட்சுமி காந்தன் கொலை வழக்கு
6. ஆளவந்தான் கொலை வழக்கு
7. நானாவதி கொலை வழக்கு
8. எம்.ஜி.ஆர் சுடப்பட்ட வழக்கு
9. விஷ ஊசி வழக்கு
10. மர்ம சந்நியாசி

முன்னுரை

சென்ற நூற்றாண்டில் தொடங்கி இன்றுவரை, பல பிரபலமான வழக்குகள் இந்திய நீதிமன்றங்களில் விசாரணைக்கு வந்திருக்கின்றன. இப்படிக் கூடவா நடந்திருக்கும் என்று ஆவலைத் தூண்டும் விதத்தில் பல வழக்குகளின் சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன. சம்பவங்களால் புகழ்பெற்ற வழக்குகள் பல உண்டு.  பிரபலமானவர்கள் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டதால் வழக்குகள் பிரபலமானதும் உண்டு.

காலப்போக்கில் பிரபலம் என்று கருதப்பட்ட பல வழக்குகள், மக்களின் நினைவைவிட்டே அகன்றுவிட்டன. இன்றைய தலைமுறையினர் அந்த வழக்குகளைப் பற்றி கேள்விப்பட்டிருப்பார்கள். ஆனால், அவர்கள் அந்த வழக்குகளில் இடம்பெற்ற சுவாரஸ்யமான சம்பவங்களைப் பற்றி தெரிந்திருக்கும் வாய்ப்புகள் அரிது. அதை ஈடு செய்யும் பொருட்டே இந்தப் புத்தகம்.

பிரபலமான வழக்குகள் பல இருக்கின்றன. ஒவ்வொரு காலக்கட்டத்தில் வெவ்வேறு வகையான வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளன. ஆங்கிலேயர்கள் இந்திய அரசர்களின்மீது சுமத்திய வழக்குகள்; ஆங்கிலேயர்களை எதிர்த்த விடுதலைப் போராளிகள்மீது போடப்பட்ட சதி வழக்குகள்; ராஜ்ஜியத்தையும், ஜமீனையும் தனக்கே சொந்தமாக்கிக் கொள்ள நினைத்த சகோதரர்களுக்கு இடையே உண்டான பகைமை, அதன் காரணமாக, நூதனமுறையில் நடைபெற்ற கொலை வழக்கு; மோகத்தால் விளைந்த கொலை, அதனால் ராஜ்ஜியத்தைத் துறக்க நேர்ந்த அரசரது வழக்கு; கல்லூரிக்குப் படிக்கச் சென்ற ராஜகுமாரர்கள் கல்லூரியின் தலைமை ஆசிரியரையே கொன்றதாக அவர்கள்மீது சுமத்தப்பட்ட வழக்கு; இந்தியா சுதந்தரமடைந்த பிறகு, பிரபலங்கள் ஈடுபட்ட அரசியல் தொடர்புடைய கொலை முயற்சி வழக்குகள், சினிமா பிரபலங்கள் சம்பந்தப்பட்ட வழக்குகள்; பேராசையினால் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கவேண்டும் என்ற நோக்கில் செய்யப்பட்ட கொள்ளைகள், கொலைகள் சம்பந்தப்பட்ட வழக்குகள்;  மனைவியைக் கவர்ந்ததால் கணவன் ஆத்திரமடைந்து கள்ளக் காதலனைக் கொன்ற வழக்கு, அந்த வழக்கின்போது கணவனுக்கு மக்களிடமிருந்த அனுதாபம் மற்றும் ஆதரவு, மேலும், குற்றவாளித் தரப்பிலும், பாதிக்கப்பட்டவரின் தரப்பிலும் நிகழ்ந்த அரசியல் தலையீடுகள்; ஒரு பெரிய ஜமீனில் ஏற்பட்ட ஆள் மாறாட்ட வழக்கு எனப் பல சுவாரஸ்யமான வழக்குகளைப் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்குடன் நான் ‘தமிழ்பேப்பர்’ என்ற இணையத்தளத்தில் கட்டுரைகளாக எழுதிவந்தேன். அந்தக் கட்டுரையின் தொகுப்பே இந்தப் புத்தகம்.

பிரபலமான வழக்குகள் இவ்வளவுதானா என்றால், இல்லை. இன்னும் நிறைய இருக்கின்றன. வரும் நாள்களில் அவற்றைப் பற்றியும் எழுதி, அவையும் புத்தக வடிவில் வரும் என்று நம்பிக்கை கொண்டுள்ளேன். ஏனைய வழக்குகளில் வழக்குச் சமாச்சாரங்கள் மட்டுமின்றி அன்றைய சமூகம், அன்றைய ஆட்சியாளர்கள், மக்களின் வாழ்வியல், சரித்திர நிகழ்வுகள் என வழக்குக்குத் தொடர்புடைய விவரங்களையும் தந்துள்ளேன். படிப்பவர்கள் அந்தக் காலத்தின் நிகழ்வுகளைத் தொடர்புபடுத்திக் கொள்வதற்கு ஏதுவாக வழக்குகளைக் (மர்ம சந்நியாசி வழக்கு நீங்கலாக) காலவரிசைப்படி கொடுத்துள்ளேன்.

இந்தத் தொகுப்பில் மொத்தம் 10 வழக்குகள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் பெரும்பான்மை, கொலை வழக்குகள். மற்றவை  கொலை முயற்சி வழக்கு, தேசத் துரோக வழக்கு போன்றவை. இந்தத் தொகுப்பில் உள்ள ஒரே சிவில் வழக்கு மற்றும் நீண்ட பக்கங்களைக் கொண்ட வழக்கு, மர்ம சந்நியாசி வழக்கு. காலவரிசையில் முன்னதாக நடந்திருப்பினும் இந்த வழக்கை கடைசியில் கொடுத்திருக்கிறேன். ஒரு பிரமாண்டமான வழக்கை எப்படி நடத்தவேண்டும் அல்லது எப்படி நடத்தக்கூடாது என்பதற்கு நல்ல உதாரணம், மர்ம சந்நியாசி வழக்கு. மர்ம சந்நியாசியில் பிரமிக்க வைக்கக்கூடிய பல சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன.

படித்து மகிழுங்கள். தவறைச் சுட்டிக்காட்டுங்கள், திருத்திக்கொள்கிறேன். உற்சாகம் தாருங்கள். இன்னும் பல படைப்புகளைத் தர முனைகிறேன்.


- SP. சொக்கலிங்கம்


1. ஆஷ் கொலை வழக்கு
மணியாச்சி சந்திப்பில் ரயில் வந்து நின்றது. முதல் வகுப்புப் பெட்டி, அந்த ரயிலிலிருந்து கழற்றப்பட்டது. அதில், ஆங்கிலேய துரை ஆஷ் மற்றும் அவருடைய மனைவி இருந்தனர். ஊர் மக்கள், ஆஷ் துரையைக் காண வந்திருந்தனர். அந்த ஊரில், ஏன் அந்த ஜில்லாவிலே ஏதாவது நடக்க வேண்டுமென்றால், அதற்கு துரை மனது வைத்தால்தான் முடியும்.

ஆஷ் துரை வந்த ரயிலின் பெட்டியை, போட் மெயில் ரயிலோடு இணைக்க வேண்டும். துரையும், அவரது மனைவியும் கொடைக்கானலில் இருந்த தங்களுடைய நான்கு குழந்தைகளையும் பார்க்கச் செல்வதற்காக இந்த ஏற்பாடு.

போட் மெயில் வருவதற்குப் பத்து நிமிடங்கள் இருந்த நிலையில், இரண்டு வாலிபர்கள், துரை இருந்த ரயில் பெட்டிக்குள் நுழைந்தனர். ஒருவன் நன்றாக எடுப்பான தோற்றத்துடன் காணப்பட்டான். தன்னுடைய நீண்ட தலை முடியைச் சீவி, கொண்டை போட்டிருந்தான். மற்றொருவன் வேஷ்டி, சட்டை உடுத்தியிருந்தான். துரை தன்னுடைய மனைவி மேரியுடன் ஆர்வமாக ஏதோ பேசிக் கொண்டிருந்தார். மேரியும் துரையும் எதிரெதிராக அமர்ந்திருந்தனர். ரயில் பெட்டிக்குள் இருவர் நுழைவதை துரை கவனிக்கவில்லை. வந்தவர்களில் ஒருவன், துரையின் அருகில் வந்து நின்றான். பெல்ஜியத்தில் தயாரிக்கப்பட்ட, பிரவுனிங் என்ற தானியங்கித் துப்பாக்கியை எடுத்தான். துரையின் நெஞ்சில் சுட்டான். துப்பாக்கிச் சூட்டின் சத்தம் கேட்டு, அமைதியாக இருந்த ரயில் நிலையம் அதிர்ந்தது. துரை அவர் அமர்ந்திருந்த இடத்தில் அப்படியே சரிந்தார். அவருடைய மனைவி அதிர்ச்சியில் உறைந்தார்.

துரையைச் சுட்டவன், பிளாட்பாரத்தில் இறங்கி ஓடினான். ரயில் நிலையத்திலிருந்த மக்கள் அவனைத் துரத்திக்கொண்டு ஓடினார்கள். ஓடியவன் நேராக பிளாட்பாரத்திலிருந்த கழிவறையின் உள்ளே நுழைந்து தாழிட்டுக்கொண்டான். துப்பாக்கிச் சூடு நடத்தியவனுடன் வந்த மற்றவன், பிளாட்பாரத்தின் இன்னொரு பக்கம் ஒடி மறைந்தான். கழிவறையினுள் மறைந்த அந்த வாலிபன், தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டான்.

துரையை, அவருடைய சிப்பந்திகள் திருநெல்வேலி மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர். ஆனால், போகும் வழியிலேயே துரையின் உயிர் பிரிந்தது. துரை கொலை செய்யப்பட்டுவிட்டார்.

ஆஷ் துரையின் கொலை, மதராஸ் மாகாணம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பரப்பரப்பாகப் பேசப்பட்டது. இறந்தவர் சாதாரண ஆள் இல்லை. அவர், திருநெல்வேலி ஜில்லாவின் கலெக்டர். மேலும், ஆங்கிலேயர். அவரைச் சுட்டவன் ஓர் இந்தியன். கொலை நடந்த தேதி ஜூன் 17, 1911. இன்னும் 5 நாள்களில், இங்கிலாந்தின் 5வது ஜார்ஜ் மன்னராக முடிசூடிக்கொள்ள இருந்தார்.

ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் புரட்சிகரமான செயல்கள் பல, நாட்டில் நடந்து கொண்டிருந்தன. ஆனால், அனைத்துப் புரட்சிகர சம்பவங்களும், வட நாட்டில் அதுவும் குறிப்பாக வங்காளத்தில்தான் நடைபெற்றன. யாரும் தமிழகத்தில் இப்படியெல்லாம் நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. யார் இதைச் செய்திருப்பார்கள்? அவர்களுடைய பின்னணி என்ன? விசாரணையில் இறங்கியது, ஆங்கிலேய காவல் துறை.

துப்பாக்கிச் சூடு நடத்தியவன், ஓர் இளைஞன். அவனுக்குச் சுமார் 25 வயது இருக்கும். அவனுடைய சட்டைப்பையில் காவல் துறை எதிர்பார்த்தது கிடைத்தது. அது ஒரு துண்டுக் காகிதம். அதில்,

‘ஆங்கிலேய மிலேச்சர்கள் நம் நாட்டை பிடித்ததோடல்லாமல், நம்முடைய சனாத்தன தர்மத்தை இழிவுபடுத்தி அதை அழிக்க முற்படுகிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் மிலேச்சர்களை விரட்டிவிட்டு , சுதந்தரம் பெற்று, சனாத்தன தர்மத்தை நிலைநிறுத்த போராடிக்கொண்டிருக்கிறான். ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குரு கோவிந்த சிங், அர்ஜூனன் வாழ்ந்த இந்தப் பாரதத்தில் பசு மாமிசத்தை உண்ணும்,  5வது ஜார்ஜ் என்ற மிலேச்சனுக்கு மணிமகுடம் சூட்டுவதா?  ஐந்தாவது ஜார்ஜ் மன்னன் இந்தியாவில் அடியெடுத்து வைத்தவுடனேயே, அவனைக் கொல்ல 3000 மதராசிகள் உறுதி மொழி எடுத்திருக்கின்றனர். அதை வெளிப்படுத்தும் விதமாகத்தான், அக்குழுவின் கடைநிலைத் தொண்டனாக இந்தக் காரியத்தை இன்று செய்தேன். பாரதத்தில் உள்ள அனைவரும் இப்படிச் செய்வதைத்தான் தங்களுடைய கடமையாக நினைக்க வேண்டும்’

என்று குறிப்பிட்டிருந்தது.

காவல் துறையினர், துப்பாக்கிச் சூடு நடத்தியது யார் என்று விரைவிலேயே கண்டுபிடித்து விட்டனர். வாஞ்சிநாத ஐயர்.

வாஞ்சிநாதனின் வீட்டில் காவல் துறை சோதனை நடத்தியது. அதில் அவர்களுக்குச் சில கடிதங்கள் கிடைத்தன. கடிதங்களில் கண்ட விவரங்களின் மூலம், ஆஷ் துரையைக் கொல்ல ரகசியக்குழு ஒன்று கூட்டுசதி செய்திருப்பது தெரியவந்தது. அக்கடிதங்களில் ஆறுமுகப்பிள்ளையின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. காவல் துறை, ஆறுமுகப்பிள்ளையின் வீட்டை  இரவோடு இரவாக முற்றுகையிட்டது. ஆறுமுகப்பிள்ளை கைது செய்யப்பட்டார். அவர் வீட்டிலும் சில கடிதங்கள் கிடைத்தன. காவல் துறை அவரை மேலும் விசாரித்ததில், சோமசுந்தரப்பிள்ளை என்ற இன்னொருவரைக் காட்டிக் கொடுத்தார். காவல் துறை சோமசுந்தரத்தைச் சுற்றி வளைத்தது. சோமசுந்தரமும் கைது செய்யப்பட்டார். ஆறுமுகப்பிள்ளையும், சோமசுந்தரமும் அரசுத் தரப்புச் சாட்சிகளாக (approver) மாறினர்.

ஆறுமுகப்பிள்ளையும், சோமசுந்தரமும் கொடுத்த வாக்குமூலத்தை வைத்து, காவல் துறை, தென்னிந்தியா முழுவதும் தேடுதல் வேட்டையை நடத்தியது. பதினான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் பின்வருமாறு,

1)             நீலகண்ட பிரம்மச்சாரி (முக்கிய குற்றவாளி)  தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்தவர். பத்திரிகையாளர். சூர்யோதையம் என்ற பத்திரிகையை நடத்திவந்தார். ஆங்கிலேய அரசாங்கம் அப்பத்திரிகையைத் தடை செய்தது. அதன் பின்னர் பல பத்திரிகைகளைத் தொடங்கினார். ஆனால், ஆங்கிலேய அரசாங்கம் அவருடைய அனைத்துப் பத்திரிகைகளையும் முடக்கியது. ஆயுதப்புரட்சியில் நம்பிக்கையுடையவர். அரவிந்த கோஷைப் பின்பற்றியவர்.  (அரவிந்த கோஷ், வங்காளத்தைச் சேர்ந்தவர். ஆங்கிலேயர்களை ஆயுதம் கொண்டு விரட்டமுடியும் என்று நம்பியவர். அலிப்பூர் குண்டு வெடிப்பில், குற்றம் சாட்டப்பட்டுப் பின்னர் விடுதலை செய்யப்பட்டார். விடுதலையான பிறகு, அரசியலை விட்டு விலகி, ஆன்மிகத்தில் ஈடுபட்டார். புதுச்சேரியில் குடிபுகுந்தார்.)

2)             சங்கரகிருஷ்ண ஐயர் (வாஞ்சிநாதனின் மைத்துனர்)  விவசாயம் செய்துவந்தார்.

3)             மாடத்துக்கடை சிதம்பரம் பிள்ளை  காய்கறி வியாபாரம் செய்துவந்தார்.

4)             முத்துகுமாரசாமி பிள்ளை  பானை வியாபாரம் செய்துவந்தார்.

5)             சுப்பையா பிள்ளை  வக்கீல் அலுவலகத்தில் குமாஸ்தாவாக வேலை பார்த்து வந்தவர்.

6)             ஜகனாதா அய்யங்கார்  சமையல் செய்யும் உத்தியோகம்

7)             ஹரிஹர  ஐயர்  வியாபாரி

8)             பாபு பிள்ளை  விவசாயி

9)             தேசிகாச்சாரி  வியாபாரி

10)           வேம்பு ஐயர்  சமையல் செய்யும் உத்தியோகம்

11)           சாவடி அருணாச்சல பிள்ளை  விவசாயம்

12)           அழகப்பா பிள்ளை  விவசாயம்

13)           வந்தே மாதரம் சுப்பிரமணிய ஐயர்  பள்ளிக்கூட வாத்தியார்

14)           பிச்சுமணி ஐயர்   சமையல் செய்யும் உத்தியோகம்

கைது செய்யப்பட்டவர்களில் பலர், இருபது வயதிலிருந்து முப்பது வயதுக்குட்பட்டவர்கள். அவர்களைத் தவிர குற்றம் சாட்டப்பட்ட இருவர், தற்கொலை செய்து கொண்டனர். அவர்கள்,

1)   தர்மராஜா  ஐயர்  விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டார்.

2)    வெங்கடேச ஐயர்  கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆங்கிலேய அரசு, ஆஷ் கொலை வழக்கு மற்றும் தேசத் துரோக நடவடிக்கைகளில், மேலும் சிலருக்குப் பங்கு இருக்கக்கூடும் என்று சந்தேகித்தது. அவர்கள்...

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-787-9.html

ஃபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் - 94459 01234 | 9445 979797

Monday, February 18, 2013

சிறந்த நிர்வாகி ஆவது எப்படி புத்தக அறிமுகம்

சிறந்த நிர்வாகி ஆவது எப்படி புத்தகத்தின் சிறிய அறிமுகம், 27-02-2013 தேதியிட்ட இந்தியா டுடே இதழில் வெளியாகியுள்ளது.

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-065-8.html



Friday, February 15, 2013

சென்னை புத்தகக் காட்சி - கிழக்கின் டாப் செல்லர் பட்டியல்

இன்றோடு சென்னை புத்தகக் காட்சி முடிவுறப் போகிறது. நேற்றைய நிலவரத்தின்படி, கிழக்கு பதிப்பகம் வெளியிட்டு எங்கள் ஸ்டால்களில் மட்டுமான விற்பனையைக் கணக்கில் எடுத்துக்கொண்டதில் அதிகம் விற்ற புத்தகங்கள் என்ற பட்டியல் இதோ. மேலே உள்ளது அதிகம் விற்றுள்ளது. கீழே செல்லச் செல்ல விற்பனை எண்ணிக்கை குறைவு. இந்தப் பட்டியலில் இன்றைக்குப் பிறகு சில மாறுதல்கள் இருக்கலாம். நாங்கள் வாங்கி விற்கும் பிறர் பதிப்புத்துள்ள புத்தகங்களை இந்தப் பட்டியலில் சேர்க்கவில்லை.

இந்த ஆண்டில் இதுவரை நாங்கள் அதிகம் விற்றிருப்பது மதன் எழுதிய ‘கிமு கிபி’தான்.
  1. கிமு கிபி
  2. மோடியின் குஜராத்: இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு முன்மாதிரி
  3. குமரிக் கண்டமா சுமேரியமா: தமிழரின் தோற்றமும் பரவலும்
  4. பிரபல கொலை வழக்குகள்
  5. மோட்டார் சைக்கிள் டைரி
  6. ராஜராஜ சோழன்
  7. ஸீரோ டிகிரி
  8. ஜாலியா தமிழ் இலக்கணம்
  9. திராவிட இயக்கம்: புனைவும் உண்மையும்
  10. ஸ்ரீரங்கத்து தேவதைகள்
  11. ஜப்பான்
  12. அக்பர்
  13. சே குவேரா: வேண்டும் விடுதலை
  14. ஹிட்லர்
  15. கோணல் பக்கங்கள் - பாகம் 1
  16. இட்லியாக இருங்கள்
  17. இரண்டாம் உலகப் போர்
  18. முதல் உலகப் போர்

குமரிக்கண்டமா, சுமேரியமா: தமிழரின் தோற்றமும் பரவலும்

இந்தியா என்பது ஒற்றை தேசமா இல்லை பல தேசிய இனங்களின் கூட்டா என்ற கேள்வி ஒரு பக்கம் பலராலும் கேட்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இது ஓர் அரசியல் கேள்வி. இந்தியாவுக்கான அரசியல் அமைப்பு எப்படி இருக்கவேண்டும் என்பதைத் தீர்மானிக்க இந்தக் கேள்விக்கான பதில் முக்கியம். பல மொழிகள் பேசப்பட்டாலும் கலாசாரம் பெரும்பாலும் ஒன்றே என்று சிலர் பதில் சொல்வார்கள். ஆனால் உண்மையில் ஒரு சிறு பிராந்தியப் பகுதியிலும்கூட கலாசாரக் கூறுகளில் எக்கச்சக்கமான வித்தியாசங்கள் இருப்பதைக் காணலாம். மதம் என்று எடுத்துக்கொண்டாலும் சிறுசிறு வித்தியாசங்களின் தொடங்கி மாபெரும் வேற்றுமைகள் உள்ளன. நான்கு வர்ணங்கள், லட்சம் சாதிகள், வர்ணத்துக்கு வெளியிலான தீண்டத்தகாத சாதிகள், தோல் நிறத்தில் வேறுபாடு, உருவ அமைப்பில் வேறுபாடு என்று கருத்துரீதியாகவும் உடற்கூறுரீதியாகவும் இந்தியாவில் எக்கச்சக்க வேற்றுமைகள். வேற்றுமையில் ஒற்றுமை காண்போம் என்று சிலர்; ஒற்றுமையே கிடையாது - எல்லாம் வேறு வேறு என்று சிலர்.

வரலாறு, மானுடவியல், சமூகவியல், மொழியியல் துறை நிபுணர்கள் இந்தியாவின் இந்தப் பல்வேறு வண்ணங்களை ஆராய்ந்தபடி இருக்கிறார்கள். இவர்களால் ஒருசில பெரும் கோட்பாடுகள் உருவாக்கப்பட்டு, கேள்விக்குள்ளாக்கப்பட்டு வந்தபடி உள்ளது.

இந்தியாவின் இரு பெரும் இனங்கள் ஆரியர்களும் திராவிடர்களும்; இதில் ஆரியர்கள் கைபர், போலன் கணவாய் வழியாக பரத கண்டத்துக்குள் நுழைந்து, இங்கு வசித்துவந்த திராவிடர்களுடன் போரிட்டு, அவர்களைத் தெற்கு நோக்கித் துரத்திவிட்டனர் என்பது ஒரு கோட்பாடு. இந்தக் கோட்பாட்டின்படி, ஆரியர்கள் வெளுப்புத் தோல் கொண்டவர்கள், உயரம் அதிகமானவர்கள், இந்தோ-ஆரிய குடும்ப மொழியான சமஸ்கிருதம் பேசியவர்கள், குதிரைகளை வைத்திருந்தவர்கள். திராவிடர்கள் குள்ளமானவர்கள், கருத்த நிறத்தவர், தமிழ் அல்லது புரோட்டோ-தமிழ் மொழி பேசியவர்கள்.

தமிழர்கள் (திராவிடர்கள்) என்று எடுத்துக்கொண்டால், கடலில் மூழ்கிப்போன குமரிக் கண்டம் என்று தென்புலத்திலிருந்து வந்தவர்கள், ஆரியர்கள் வருகைக்குமுன் இந்தியா முழுமையிலும் வசித்தவர்கள் என்பது தமிழ் ஆராய்ச்சியாளர்கள் ஒருசிலரது கருத்து.

சிந்துவெளி நாகரிகத்தின் முத்திரை எழுத்துகள் தொடர்பான ஆராய்ச்சிக்குப் பிறகு, சிந்துவெளிப் பகுதி நாகரிகம் திராவிட நாகரிகமே என்பதாக சில அறிஞர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இல்லை இல்லை, சிந்து சரசுவதி நதி நாகரிகம் என்பது முழுமையாக ஆரிய நாகரிகம்; இந்த ஆரியர்கள் இந்தியாவுக்குப் படையெடுத்தெல்லாம் வரவில்லை; அவர்கள் சரசுவதி நதிக்கரையில் வாழ்ந்த மண்ணின் மைந்தர்கள்; சரசுவதி நாகரிகம்தான் வேத நாகரிகம்; அவர்கள்தான் லோத்தால், தோலாவிரா போன்ற நகரங்களை (பின்னர் மொஹஞ்சதாரோ, ஹரப்பாவையும்) கட்டினார்கள்; வேத உபநிடதங்களையும் எழுதினார்கள்; சரசுவதி வற்றிப்போனதால் சிந்துவையும் கங்கையையும் நோக்கி நகர்ந்தார்கள் என்கிறார்கள் சிலர்.

இன்று ஆரியர்களைப் பற்றியும் நமக்குத் தெளிவான தகவல்கள் இல்லை; திராவிடர்களைப் பற்றியும் தெளிவான தகவல்கள் இல்லை. ஆனாலும் இவை குறித்த தகவல்கள் நம்முடைய பாடப்புத்தகங்களில் சர்வ சாதாரணமாக, முற்று முழுதான உண்மைகளைப் போல உலா வருகின்றன.

இவற்றுக்கிடையில், பா. பிரபாகரன் வலுவான ஒரு கோட்பாட்டை முன்வைக்கிறார். முதலில் தமிழர்களின் தோற்றம் குறித்து தற்போது பரவலாக இருக்கும் கோட்பாடுகளை ஒவ்வொன்றாக எடுத்துக்கொண்டு ஆராய்கிறார். அவை ஏன் தவறானவை என்று தன் கருத்துகளை ஆணித்தரமாக வைக்கிறார்.

குமரிக்கண்டம் என்ற ஒன்று கன்னியாகுமரிக்குத் தெற்கே இருக்கச் சாத்தியமே இல்லை என்று விளக்கியதற்குப் பிறகு, இன்றைய தமிழர்களின் தோற்றுவாய் மத்திய தரைப் பகுதியான (இன்றைய ஈராக்) சுமேரியம்தான் என்கிறார். அதற்கு வலு சேர்க்கும் வகையில் சுமேரிய நாகரிகம் பற்றி விரிவாக விளக்குகிறார். சுமேரியர்கள் சுட்ட களிமண்ணில் எழுதிவைத்துவிட்டுச் சென்ற பல விஷயங்கள் பல்லாயிரம் ஆண்டுகள் கழித்தும் நமக்குக் கிடைக்கின்றன. அவற்றை இன்று படிக்கமுடியும்; பொருள் புரிந்துகொள்ள முடியும். அனைத்தும் இணையத்தில் ஒரு தொகுப்பாகக் கிடைக்கின்றன. அவற்றை ஆராய்வதோடு தமிழ் இலக்கியங்களில், முக்கியமாக இறையனார் அகப்பொருள் உரையில் சொல்லியுள்ள விஷயங்கள், சங்க இலக்கியங்களில் சொல்லப்பட்டுள்ளவை, சமஸ்கிருத புராணங்களில் சொல்லப்பட்டுள்ளவை ஆகியவற்றோடு ஒப்புநோக்கி, இந்த முடிவுக்கு வருகிறார் பிரபாகரன்.

சுமேரிய சுடுமண் ஓடுகளில் மெலூஹா, தில்முன் என்று இரு இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. தூரத்தில் உள்ள இந்த நாடுகள் (பகுதிகள்) சுமேரியத்துடன் வர்த்தகத்தின் ஈடுபட்டிருந்தன. மெலூஹாதான் சிந்து சரசுவதி நாகரிகம் என்று கிட்டத்தட்ட அனைவருமே சொல்கின்றனர். Immortals of Meluha என்னும் தொடர் வெகுஜனக் கதை வெளியாகி இந்தியாவில் விற்பனையில் சக்கைப்போடு போடுகிறது. தில்முன் என்பது பஹ்ரைன் அல்லது அதற்கு அருகில் உள்ள பகுதி என்பதாகச் சிலர் சொல்கின்றனர். ஆனால் பிரபாகரனின் கருத்து, தில்முன் என்பது தமிழகம்தான் என்பது. அதற்கான ஆதாரங்களை பிரபாகரன் முன்வைக்கிறார்.

பிரபாகரனின் கருத்தின்படி, திராவிடர்கள், ஆரியர்கள் என இருவருமே சுமேரியத்திலிருந்து இந்தியா வந்தவர்கள். திராவிடர்கள் நீர்வழியாகக் கப்பல்களில் வந்து இன்றைய கேரளக் கடற்கரையில் இறங்கினர்; ஆரியர்கள் தரை வழியாகப் பல கலப்புகளைச் சந்தித்தபடி வடமேற்கு எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழைந்தனர்.

பிரபாகரன் முன்வைக்கும் கோட்பாட்டை நீங்கள் உங்கள் அரசியல் சமூகக் கருத்துகளுக்கு ஏற்ப ஆதரிக்கலாம் அல்லது நிராகரிக்கலாம். ஆனால் அவருடைய சுவாரசியமான எழுத்தை நிராகரிக்க முடியாது. சுமேரிய நாகரிகம், கிரீட் தீவில் நிலவிய மினோயன் நாகரிகம், தமிழகக் கதையாடல்கள், சிந்துவெளி நாகரிகம், இந்த எல்லா இடங்களிலும் நிலவிய நம்பிக்கைகள், கடவுள்கள், வழக்கங்கள் ஆகியவற்றை மிக சுவாரசியமாகத் தொகுத்துக் கொடுத்துள்ளார் பிரபாகரன். அவற்றிலிருந்து அவற்றுக்கு இடையேயான தொடர்புகள் எப்படி இருந்திருக்கலாம் என்ற தன் ஊகத்தையும் அழகாக முன்வைக்கிறார். நிறைய படங்கள் கொண்டுள்ளது இந்தப் புத்தகம்.

தொழில்முறை வரலாற்று ஆராய்ச்சியாளர் அல்லர் பிரபாகரன். கப்பல் போக்குவரத்து லாஜிஸ்டிக்ஸ் துறையில் பல ஆண்டுகால அனுபவம் வாய்ந்தவர். லாஜிஸ்டிக்ஸ்: ஓர் எளிய அறிமுகம் என்ற புத்தகத்தை கிழக்கு பதிப்பகத்துக்காக எழுதியவர். தமிழர்களின் தோற்றம் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரையை முதலில் இவர் செம்மொழி மாநாட்டில் சமர்ப்பித்தார். அந்தக் கட்டுரை சிறிது சிறிதாக வளர்ந்து இன்று ஒரு புத்தகமாக மாறியுள்ளது.

புத்தகத்தை வாங்க

விலை ரூ. 125

மௌனத்தின் அலறல்

இந்தியப் பிரிவினை என்பது நமக்கு நன்கு தெரிந்த ஒரு வரலாற்று நிகழ்வு. இதை வெறும் புள்ளிவிவரங்களாகவும் அரசியல் நிகழ்வுகளாகவும் பலரும் பதிவு செய்துள்ளனர். சிலர் கதைகளாகவும் பதிவு செய்துள்ளனர். குஷ்வந்த் சிங்கின் பாகிஸ்தான் போகும் ரயில் அப்படிப்பட்ட ஒரு கதைப் பதிவு. அதனை சென்ற ஆண்டு கிழக்கு பதிப்பகம் தமிழாக்கம் செய்து கொண்டுவந்திருந்தது. இந்தியப் பிரிவினை பற்றிய ஒரு வரலாற்றுப் புத்தகத்தையும் கிழக்கு முன்னதாகக் கொண்டுவந்திருக்கிறது.

ஆனால் ஊர்வஷி புட்டாலியா எழுதியுள்ள புத்தகம் சற்றே வித்தியாசமானது. இது மக்களின் குரல்கள்மூலம் பிரிவினையின்போது நடந்த நிகழ்வுகளை முன்வைக்கிறது. ஊர்வஷி புட்டாலியாவை நான் நன்கு அறிவேன். பெண்ணியவாதி. சிறு பதிப்பாளர். எழுத்திலும் புத்தகப் பதிப்புத் துறையிலும் பல ஆண்டுகளாக ஈடுபட்டுவருபவர்.

பிரிவினையின்போது எண்ணற்ற மக்கள் வீடிழந்தனர். கொல்லப்பட்டனர். பெண்கள் முக்கியமாகத் திருடப்பட்டனர். வன்கலவிக்குப்பின் கொல்லப்பட்டனர். பலர் அடிமைகளாக தன்னை நாசம் செய்தவனுடனேயே வசித்து பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டு இருக்கவேண்டியிருந்தது.

ஊர்வஷி இதுபோல பாதிக்கப்பட்டு உயிருடன் இருக்கும் பலரைச் சந்தித்து, அவர்களுடைய கதைகளைச் சொல்வதன்மூலம் பிரிவினையின்போது என்ன நடந்தது என்பதை நம்மைப் புரிந்துகொள்ள வைக்கிறார்.

இன்று, 2012-13-ல்கூட பல நகரங்களில் பெண்கள் தைரியமாக வெளியே போகமுடிவதில்லை. கடுமையான பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். ஆண்கள் கூட்டமாகச் சேர்ந்து மிருகங்கள்போல தனியான பெண்கள்மீது விழுந்து தாக்குகிறார்கள். பிரிவினையின்போது இந்த வெறிகொண்ட கூட்டங்கள் (இரு பக்கத்திலுமே) எப்படி நடந்துகொண்டிருக்கும் என்று நீங்கள் ஓரளவுக்கு ஊகிக்கலாம். உண்மை அதைவிடப் பதைபதைப்பானது.

மௌனமாகக் கிடந்த அலறல்களை இந்தப் புத்தகம் ஓரளவுக்கு வெளிக்கொணர்கிறது. The Other Side of Silence என்று ஆங்கிலத்தில் வெளியான இந்தப் புத்தகத்தை கே.ஜி. ஜவர்லால் மிக நேர்த்தியாகத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

புத்தகத்தை வாங்க

பக்கங்கள்: 352
விலை: ரூ. 250/-

இந்தியன் ஆவது எப்படி?

நான் சமீபத்தில் படித்த புத்தகங்களில் என்னை மிகவும் கவர்ந்தது பவன் வர்மா எழுதிய 'Becoming Indian' என்ற ஆங்கிலப் புத்தகம். இவர் எழுதி சில ஆண்டுகளுக்குமுன் வெளியாகியிருந்த 'Being Indian' என்ற புத்தகத்தையும் படித்துள்ளேன்.

பவன் வர்மா, இந்திய மனநிலையை ஆராய்கிறார். நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்ட இந்திய கலாசாரம் எவ்வாறு காலனிய காலத்தில் மனத்தளவில் அடிமையானது என்பதை ஆராய்வதுதான் அவருடைய நோக்கம். பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவின் பெரும்பகுதியைத் தன்வசப்படுத்தியதும், இப்பகுதியை ஆட்சி செய்யவேண்டிய கட்டாயம் அதற்கு ஏற்பட்டது. அதன் ஆட்சிக்காலத்தின் முற்பகுதியில் இந்தியா வந்த பல ஆட்சியாளர்களும் சமஸ்கிருத மொழி, இந்திய கலாசாரம் ஆகியவற்றால் பெரிதும் ஈர்க்கப்பட்டார்கள். இந்தக் கீழையியல் விரும்பிகள் இந்திய கலாசாரத்தின் தொன்மையை மிகவும் மதித்தனர். இந்தியாவைப் பொருளாதாரரீதியில் சுரண்டி தம்முடைய கம்பெனிக்கு வளம் சேர்க்கவேண்டும் என்பதி அடிப்படை நோக்கமாக இருந்தாலும் அதே நேரம் இங்குள்ள கலாசாரத்தை ஆங்கிலத்துக்குக் கொண்டுசென்று, அதன்மூலம் உலகம் முழுதும் கொண்டுசேர்க்கவேண்டும் என்பதும் அவர்களுடைய விருப்பமாக இருந்தது. வாரன் ஹேஸ்டிங்ஸ் முதற்கொண்டு இந்தப் பணியில் ஈடுபட்டனர்.

இன்று நாம் நம்முடைய தொன்மைகளாக உணர்ந்திருக்கும் வேதங்கள், உபநிடதங்கள், தத்துவ இலக்கியங்கள், பகவத் கீதை, சமஸ்கிருத இலக்கணமான அஷ்டாத்யாயீ, இதிகாசங்களான ராமாயண மகாபாரதம் தொடங்கி, தமிழ், தெலுங்கு முதலான எண்ணற்ற மொழிகளுக்கு அகராதிகள், இலக்கணப் புத்தகங்கள், இவற்றில் உள்ள பல்வேறு இலக்கியங்களுக்கான ஆங்கில மொழியாக்கம் என்று பிரிட்டிஷ்காரர்களுடைய கொடை மிக நீண்டது. இன்று நாம் பெருமைப்பட்டுக்கொள்ளும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பிரமி எழுத்துகளை மீண்டும் படிக்கச் சொல்லிக்கொடுத்தது கிழக்கிந்தியக் கம்பெனி அதிகாரி ஒருவரே. இந்தியாவின் பல்வேறு புராதன கலாசாரச் சின்னங்களான கோவில்கள், சிந்து-சரசுவதி நதிக்கரை நகரங்கள், அசோகரின் தூண்கள் என அனைத்தையும் அவற்றின் உண்மையான பொருள் என்ன என்பதோடு நமக்குச் சுட்டிக்காட்டியது ஆங்கிலேயர்களே.

ராஜராஜன் என்ற அரசன் இருந்து தஞ்சைப் பெரிய கோவில் என்ற மாபெரும் படைப்பை உருவாக்கியதையும், அசோகர் என்ற பேரரசர் தன் பரந்து விரிந்திருந்த சாம்ராஜ்ஜியத்தின் ஒரு கோடி முதல் மறு கோடி வரை எண்ணற்ற தூண்களைக் கட்டித் தன் கட்டளைகளைப் பிறப்பித்திருந்ததையும், பல்லவர்கள் மாமல்லபுரம் என்ற மாபெரும் சிற்ப நகரை நிர்மாணித்திருந்ததையும், உலகப் புகழ்பெற்ற இந்திய ஓவியங்கள் அடங்கிய அஜந்தா குகைகளையும் மீள்கண்டெடுத்து நமக்குத் தந்தது பிரிட்டிஷாரே.

ஆனால் கிழக்கிந்தியக் கம்பெனியின் பிற்காலத்தில் வந்த பிரிட்டிஷ் அதிகாரிகள், இந்தியக் கண்டுபிடிப்புகளும், இலக்கியங்களும், கலைகளும் குப்பைகள், எவற்றுக்கும் உதவாதவை என்ற கருத்தைக் கொண்டிருந்தார்கள். மெக்காலேயை இதற்குப் பெரிய உதாரணமாகச் சொல்லலாம். கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியில் இந்தியர்கள் எம்மாதிரியான கல்வியைக் கற்கவேண்டும் என்பதை முடிவெடுப்பதில் அவர் முக்கியமானவராக இருந்தார். வெகு சில நாட்களே அவர் இந்தியாவில் தங்கியிருந்தாலும் அவர் விட்டுச் சென்ற தாக்கம் இன்றளவும் இந்தியர்களைப் பாதித்துவருகிறது.

ஆங்கில மொழி, ஆங்கிலேயர்கள் தூக்கிப் பிடித்த விழுமியங்கள் என்று தொடங்கிய அந்தக் கல்விமுறை இன்று இந்தியர்களைத் தன் கிடுக்கிப் பிடியில் வைத்துள்ளது. தன் பாரம்பரியம் என்பதே கீழானது, தன் எஜமானர்களாகிய ஆங்கிலேயர்களின் பாரம்பரியமும் கலாசாரமும் மொழியுமே உயர்ந்தவை என்ற கருத்து இந்தியர்கள்மீது திணிக்கப்பட்டது; இந்தியர்களும் விரும்பி இதனை ஏற்றுக்கொண்டார்கள்.

இந்நிலையில் இந்தியா என்பது என்ன, இந்தியர் என்பவர் யார், காலனியத்தால் வெற்றிகொள்ளப்பட்ட ஒரு நபர் மீண்டும் இந்தியன் ஆவது எப்படி என்பதை ஆராய முற்படுகிறது இந்த நூல்.

நூலாசிரியர் பவன் வர்மா, தற்போது பூட்டானுக்கான இந்தியத் தூதராக உள்ளார். இந்திய அயல்துறை பணியில் இருப்பவர். சைப்ரஸ் நாட்டுக்கான இந்தியத் தூதராக இருந்துள்ளார்.

இந்தியாவின் சமூக வரலாற்றை பொதுமக்கள் புரிந்துகொள்ளும் அளவுக்கு எளிமையாகக் கொடுத்துள்ளார். இந்தப் புத்தகத்தைத் தமிழாக்கம் செய்திருப்பவர் எஸ். கிருஷ்ணமூர்த்தி.

புத்தகத்தை வாங்க

பக்கங்கள்: 384
விலை ரூ. 250

அணு மின்சாரம்: அவசியமா, ஆபத்தா

கூடங்குளம் அணு மின் நிலையம் தொடர்பாக நாட்கணக்கில் கூடங்குளம்/இடிந்தகரை பகுதியில் போராட்டம் நடந்துவருகிறது. எஸ்.பி.உதயகுமார் தலைமை ஏற்று நடத்திவரும் இந்தப் போராட்டம், மிக முக்கியமானது. அணு மின் நிலையங்கள் அமைப்பதற்கு எதிரான இயக்கங்கள் இந்தியா முழுதும் ஆங்காங்கே நடந்துவருகின்றன.

அணு மின் நிலையங்கள் ஆபத்தானவை, அந்தப் பகுதியையே அழித்துவிடக் கூடியவை, அணுக் கழிவுகளை எப்படி அப்புறப்படுத்தி அழிப்பது என்பது தொடர்பாக அறிவியலாளர்களிடம் எந்தத் தீர்வும் இல்லை, கல்பாக்கம் உட்பட்ட இந்திய அணு மின் நிலையங்களில் தொடர்ந்து பல விபத்துகள் நடந்துவருகின்றன; ஆனால் அவை மூடி மறைக்கப்படுகின்றன, மூன்று மைல் தீவுகள், செர்னோபில், ஃபுகுஷிமா போன்ற விபத்துகள் இந்தியாவில் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம், அணு எரிபொருள்களுக்கான கச்சா தாதுக்களை வெட்டி எடுக்கும் இடங்களிலும் அவற்றைப் பண்படுத்தும் இடங்களிலும் ஏகப்பட்ட அப்பாவி மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றெல்லாம் அணு உலை எதிர்ப்பாளர்கள் பேசிவருகிறார்கள்.

அணு உலை எதிர்ப்புப் புத்தகங்கள், கையேடுகள் எனத் தமிழில் ஏகப்பட்டவை வெளியாகியுள்ளன. இந்தப் புத்தகக் கண்காட்சியிலும்கூட இதுதான் நிலை.

இதற்கு மாறாக, இந்திய அணு சக்தித் துறையானது பொதுமக்களிடம் பேசுவதே இல்லை. அவர்களுடைய நோக்கமே, ‘எங்களுக்குத் தெரியும், எல்லாம் சரியாக உள்ளது. எனவே வாயை மூடிக்கொண்டு உங்கள் வேலையைப் பாருங்கள்’ என்பதாகவே உள்ளது துரதிர்ஷ்டமே.

சௌரவ் ஜா எழுதி இரு ஆண்டுகளுக்குமுன் வெளியான The Upside Down Book of Nuclear Power என்ற புத்தகம் அணு சக்திக்கு ஆதரவான ஒன்று. அணு சக்திக்கு எதிரான புத்தகத்தை எழுதிவிடுவது சுலபம். ஆனால் ஆதரவாக ஒரு புத்தகத்தை எழுதுவது என்பது மிக மிகக் கடினம் என்பதையே அவ்வாறு வெளியாகியுள்ள புத்தகங்களின் எண்ணிக்கையை வைத்தே சொல்லிவிடலாம். முந்தைய புத்தகங்கள் படிப்போரின் உணர்ச்சிகளை மட்டுமே தீண்டக்கூடியவை. ஆனால் பிந்தைய புத்தகங்கள் நடுநிலையுடன் இந்தச் சிக்கலை அணுகவேண்டும். அணு சக்தித் துறையில் என்னென்ன பிரச்னைகள் உள்ளன என்ற உண்மையை முன்வைக்கவேண்டும். ஃபுகுஷிமாவில் ஏன் விபத்து நடந்தது என்று விளக்கியாகவேண்டும். அதேபோன்ற பிரச்னைகள் இந்தியாவில் ஏற்படாமல் இருக்க என்னவெல்லாம் செய்யப்பட்டுள்ளது என்று விளக்கவேண்டும். அப்படியே இந்திய அணு உலைகளில் ஏதேனும் விபத்து ஏற்பட்டாலும் அந்த விபத்தின் விளைவுகள் என்னவாக இருக்கும் என்று சொல்லவேண்டும். அணுக் கழிவுகளை என்னதான் செய்வது என்று பேசியே ஆகவேண்டும். உண்மையில் அணுக்கழிவுகள் என்றால் என்ன என்பதிலிருந்து ஆரம்பிக்கவேண்டும்.

சௌரவ் ஜா இதனை மிக அழகாகக் கையாள்கிறார். ஆற்றல் துறை ஆலோசகராக இருக்கும் இவர் எழுதிய முதல் புத்தகம் இது என்பது ஆச்சரியத்தைத் தருகிறது.

நான் அணு சக்தித் துறையின் தலைவனாக இருந்தால், இந்தப் புத்தகத்தை வேண்டிய பிரதிகள் வாங்கி, அணு சக்தி குறித்து பயம் கொள்வோர் அனைவருக்கும் இலவசமாக விநியோகிப்பேன். அப்படி நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் கம்மி என்பதால் அணு சக்தியில் ஆர்வம் கொண்டோர் இந்தப் புத்தகத்தைக் காசு கொடுத்து வாங்கிப் படித்தாகவேண்டும். இந்தப் புத்தகத்தைப் படிப்பதற்கு பெரும் அறிவியல் அறிவு ஏதும் தேவையில்லை. படிக்க எளிதான மொழியிலேயே எழுதப்பட்டுள்ளது; மொழிமாற்றமும் எளிதாகவே உள்ளது.

இந்தப் புத்தகத்தை வாங்கிப் படிப்பவர்கள், படித்தபின் புத்தகத்தை உங்கள் நண்பர்களுக்குக் கொடுத்துப் படிக்கச் சொல்லுங்கள்.


புத்தகத்தை வாங்க

ஆசிரியர்: சௌரவ் ஜா
தமிழாக்கம்: சுந்தரேச பாண்டியன்
பக்கங்கள்: 288
விலை: ரூ. 200/-

மோடியின் குஜராத்: இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு முன்மாதிரி


இந்த ஆண்டு நாங்கள் குறைவான புத்தகங்களையே கொண்டுவந்துள்ளோம். அவற்றில் சில புத்தகக் காட்சிக்கு ஒரு நாள் முன்னதாகக் கையில் கிடைத்தவையே. அவற்றுக்கான அறிமுகமாக இந்தத் தொடர் பதிவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். இந்தப் பதிவுகளில், கடந்த சென்னை புத்தகக் காட்சிக்குப் பிறகு வந்த கிழக்கின் அனைத்து புதுப் புத்தகங்களையும் பதிவு செய்வதாக உள்ளேன்.

‘மோடியின் குஜராத்’ என்ற புத்தகத்தை எழுதியவர் சரவணன் தங்கதுரை. சென்னையில் மென்பொருள் துறையில் வேலை செய்கிறார். இந்தியாவில் அரசுகள் மக்களுக்குத் தேவையான எந்த சேவையையும் முழுமையாகத் தருவதில்லை என்பதை நம் கண்கூடாகப் பார்க்கிறோம். மின்சாரம், சாலைகள், குடிநீர், வாழ்வாதாரப் பாதுகாப்பு, தரமான கல்வி, ஏழைகளுக்கான நலத்திட்டங்கள், சட்டம் ஒழுங்குப் பாதுகாப்பு என்று எதை எடுத்துக்கொண்டாலும் அது நாம் எதிர்பார்க்கும் அளவுக்கு இல்லை. அதற்குமேலாக லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. நிர்வாகம் என்பது மழுங்கிப் போய்விட்டது. இதனால் பொதுமக்கள் ஒருவித விரக்தியில் இருக்கிறார்கள். தங்கள் வாழ்நாளில் தரமான சேவையைத் தரக்கூடிய ஓர் அரசைக் காண முடியுமா, சிங்கப்பூர் போன்றோ பல்வேறு மேலை நாடுகள் போன்றோ, வளர்ந்த ஒரு நாடாக இந்தியா என்றாவது மாறக்கூடுமா என்பதே அவர்களின் கவலையாக உள்ளது.

இந்நிலையில் குஜராத்தில் கடந்த 10 ஆண்டுகளாக மோடி பெருமளவு மாற்றங்களை நிர்வாகத்தில் செய்துள்ளார் என்பதை சரவணன் கேள்விப்படுகிறார். தானே சென்று போய்ப் பார்த்துவிட்டு வருவது என்று முடிவெடுக்கும் சரவணன் சில முறை அங்கு சென்று பார்க்கிறார்; மக்களிடம் பேசுகிறார்; அரசு அதிகாரிகளிடம் பேசுகிறார். அதன் தொடர்ச்சியே இந்தப் புத்தகம்.

மோடியின்மீது இந்தியாவின் பல்வேறு மதச்சார்பற்ற அறிவுஜீவிகள் கடுமையான பல குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள். இந்தப் புத்தகம் அவற்றுக்கு பதில் சொல்லக்கூடியதல்ல. குஜராத்தில் சரவணன் பார்த்தவரை மாற்றங்கள் நிகழ்ந்துள்ளனவா? அவை மோடியால் நிகழ்ந்துள்ளனவா? உண்மை என்பது அரசு தரும் புள்ளிவிவரங்கள் மட்டும்தான்? தரையளவில் மக்கள் என்ன நினைக்கிறார்கள்? இவற்றைத் தொகுத்து முன்வைக்கும் சரவணன், குஜராத்தின் மாதிரியைப் பின்பற்றினால் இந்தியாவின் பிற மாநிலங்களும் மிகத் தரமான சேவையை மக்களுக்குத் தரமுடியும் என்கிறார்.

மோடி பொதுஜனத் தொடர்பில் மட்டும் வல்லவரா அல்லது இந்தியா எதிர்பார்த்துக் காத்திருக்கும் வளர்ச்சியின் மெஸ்ஸையாவா? அவரவர்க்கு அவரவர் கருத்துகள். ஆனால் எதிர்ப்பாளர்கள், இந்தப் புத்தகம் முன்வைக்கும் தரவுகளையும் புள்ளிவிவரங்களையும் புறம்தள்ளிவிட்டுப் போகமுடியாது.

புத்தகத்தை இணையத்தில் வாங்க

பக்கங்கள்: 152
விலை ரூ. 100/-