Search This Blog

Friday, August 23, 2013

கிழக்கிந்திய கம்பெனி - ஒரு வரலாறு

கிழக்கிந்திய கம்பெனி - ஒரு வரலாறு
நிக் ராபின்ஸ்
தமிழில்: ராமன் ராஜா
பக் : 392
விலை : 220



இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க

புத்தகத்திலிருந்து...

வருடம், 2000. ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி தோன்றிய 400வது ஆண்டு விழா. அதே வருடம்தான் நான் பணி செய்வதற்காக லண்டன் நகர் வந்து சேர்ந்தேன். கம்பெனியின் 275 வருட வாழ்க்கை முழுவதும் இங்கேதான் அதன் தலைமையகம் இருந்தது. இன்றுபோலவே அன்றும், சர்வ தேசப் பொருளாதார மார்க்கெட்டில் லண்டன் ஒரு முக்கியமான மையம்.
புதிய ஆயிரமாண்டு பிறந்தபோது மார்க்கெட்டே ஒரு மிதப்பில்தான் இருந்தது. இப்போது யோசித்துப் பார்த்தால், 1999ன் கடைசி நாள் அன்று டாட் காம் குமிழியின் உன்மத்தம் ஏற்கெனவே உச்சகட்டத்தை அடைந்திருந்தது. இந்த சூதாட்ட மேகம் உடைத்துக்கொண்டு கொட்ட ஆரம்பித்தபோது, 1929க்குப் பிறகு கேள்விப்படாத அளவுக்கு மாபெரும் தில்லுமுல்லுகள் நடந்திருப்பது தெரியவந்தது. முதலீடு செய்யும்போது சமூகப் பொறுப்புணர்வுடன் செய்யவேண்டும் என்று சொல்லும் கட்சியில் நானும் சேரத் தொடங்கினேன்.
பங்கு விலைகள் சரிய ஆரம்பித்தன. முழுதாக மூன்று வருடம் இறங்கியபிறகு, விலைகள் சரி பாதிக்கு வந்து நின்றன. கொஞ்ச காலத்துக்கு, பங்குச் சந்தையில் ஓரளவு பணிவு தென்பட்டது. என்ரான், வேர்ல்ட்காம், டைகோ போன்ற ஒரு சில கெட்ட ஆப்பிள்கள்தான் நாற்றமடிக்கின்றனவா, அல்லது பழக் கடையே அழுகிப் போய்விட்டதா என்பதுதான் உலகம் முழுவதும் பேச்சு! கார்ப்பரேட் முதலாளித்துவமே கேள்விக்குறியாகப் போனது.
பங்குச் சந்தை கணினித் திரையைப் பார்க்கச் சகிக்கவில்லை; தொடர்ந்து விலை இறக்கம். ஒரே சிவப்பு மயம்! இதிலிருந்து கொஞ்சம் விலகி இருக்கலாமே என்று காலார நடக்க ஆரம்பித்தேன். வரலாற்றுப் புகழ் பெற்ற ஸ்கொயர் மைல், ராயல் எக்ஸ்சேஞ்ச், இங்கிலாந்து வங்கி என்று பார்த்துக்கொண்டே நடந்தேன். எக்ஸ்சேஞ்ச் சந்துக்கு வந்தேன். இங்கே உள்ள காப்பிக் கடைகளில்தான் பங்குத் தரகர்கள் கூடுவது வழக்கம். சூடான கிசுகிசுக்களோடு பங்குகளும் சேர்ந்து கை மாறும்.
ஒரு நாள் கிழக்குப் பக்கமாக இன்னும் கொஞ்ச தூரம் நடந்தேன். லெடன்ஹால் தெருவுக்குப் போய், கிழக்கிந்தியக் கம்பெனியின் தலைமை அலுவலகம் இருந்த இடத்தைப் பார்த்துவிட்டு வேலைக்குத் திரும்பலாம் என்று எண்ணம்.
லெடன்ஹால் தெருவும் லைம் தெருவும் சந்திக்கும் மூலையில் திரும்பியபோது ஓர் ஆச்சரியம்: இந்த இடத்தில்தான் கிழக்கிந்தியக் கம்பெனி இருநூறு வருடத்துக்கு மேலாக நின்றிருந்தது. இப்போது அங்கே ஒன்றுமே இல்லை. ஓர் அறிவிப்போ, பலகையோ, கல்வெட்டோ எதுவுமே காணோம்! உலகத்தின் மிகச் சக்தி வாய்ந்த கார்ப்பரேஷன் இங்கே ஒரு காலத்தில் கொலுவிருந்த அடையாளமே இல்லை.
இந்த நாட்டின் கலாசாரமோ, தன் பாரம்பரியத்தைப் பேண விரும்புவது. இருந்தும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கம்பெனியை லண்டனின் அடையாளத்திலிருந்தே ஏன் துடைத்து எறிந்துவிட்டார்கள்? புதிர் தாங்கவில்லை எனக்கு.
இந்தக் கேள்விக்கு விடை சொல்லும் முயற்சிதான் இந்தப் புத்தகம். அதைவிட முக்கியமாக, இருபத்தோராம் நூற்றாண்டின் உலகமயமான பொருளாதாரத்துக்குக் கம்பெனி விட்டுவிட்டுப் போயிருக்கும் சீதனம் என்ன? இந்தக் கேள்வியையும் மறுபடி ஆராயவேண்டியுள்ளது.
ஞான ஒளிக் காலம்என்று புகழ் பெற்ற நாள்களில் ஆரம்பித்து, கம்பெனியின் கடந்த காலத்துக்குள் ஆழமாக முங்கினேன். அப்போதுதான் ஒன்று புரிந்தது: இது ஏதோ கடந்த கால நினைவு மட்டுமல்ல; இந்த நிறுவனத்தின் பழக்கவழக்கங்கள் இன்றைக்கு நமக்கெல்லாம் மிகவும் பரிச்சயமானதுபோல் இருந்தன. பங்குதாரர்கள் பலர் சேர்ந்து ஒரு நிறுவனத்தின் உடைமையாளர்களாக இருக்கும் கார்ப்பரேட் அமைப்புக்கே முன்னோடி கிழக்கிந்தியக் கம்பெனிதான். நவீன பிசினஸ் நிர்வாகத்தின் அடித்தளத்தை அமைத்துக்கொடுத்ததும் கம்பெனிதான்.
கம்பெனிக்கும் அதன் அதிகாரிகளுக்கும் ஒரே குறிதான்: லாபம்! சொந்த லாபம், கம்பெனிக்கு லாபம். இது, அவர்கள் ஆசியச் சந்தையை ஆட்டிப் படைப்பதில் போய் முடிந்தது. அது மட்டுமின்றி இந்தியாவின் பெரும் பகுதிகளையும் அவர்கள் ஆட்சி செய்தார்கள்; லாபம் சம்பாதித்தார்கள். ஆனால் கம்பெனி அதிகாரிகள் நடத்திய தில்லுமுல்லுகள், பங்குச்சந்தையில் அவர்கள் செய்த லீலைகள், மனித உரிமைகளை அவர்கள் நசுக்கிய விதம் எல்லாவற்றையும் பார்த்து அன்று உலகமே திகைத்தது.

அதையெல்லாம் படிக்கப் படிக்க, இன்றைய ராட்சச கார்ப்பரேட் நிறுவனங்களுடன் இருக்கும் ஒற்றுமை மலைக்க வைத்தது. கிழக்கிந்தியக் கம்பெனி, மார்க்கெட் வலிமையில் வால் மார்ட்; ஊழலில் என்ரான்; மானுடப் பேரழிவில் யூனியன் கார்பைட்.


No comments:

Post a Comment