Search This Blog

Thursday, August 1, 2013

அந்தமான் சிறை அல்லது இருட்டு உலகம்


அந்தமான் சிறை அல்லது இருட்டு உலகம்
என்.சொக்கன்
விலை: 100/-
பக் : 152




இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
போன் மூலம் வாங்க: Dial For Books - 94459 01234


புத்தகத்திலிருந்து...

இந்தியச் சுதந்தரப் போராட்டத்தின் அதிவேக வளர்ச்சியைக் கட்டுப்படுத்தமுடியாமல் திணறிக்கொண்டிருந்த ஆங்கிலேயர்களுக்கு மௌட் குழுவினரின் அறிக்கையைப் படிக்கும்போது காதில் தேன் வந்து பாய்ந்தது. உடனடியாக அந்தமானில் ஒரு தண்டனைக் குடியிருப்பு அமைக்கவேண்டும் என்று உத்தரவு போட்டுவிட்டார்கள். இந்தப் பொறுப்பு டாக்டர் ஜேம்ஸ் பேட்டிஸன் வால்கர் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
1858 மார்ச் 4. கொல்கத்தாவிலிருந்து டாக்டர் வால்கர் தலைமையில் ஐம்பது காவலர்கள், இருநூறு கைதிகள், இரண்டு மருத்துவர்களோடு ஒரு கப்பல் புறப்பட்டது. ஆறு நாள் கழித்து அந்தமான் ப்ளெய்ர் துறைமுகத்தில் சென்று இறங்கியது.
டாக்டர் வால்கர் அந்தமான் தண்டனைக் குடியிருப்புகளின் முதல் சூப்பிரன்டண்ட். 1789ல் ஆர்க்கிபால்ட் ப்ளெய்ர் தொடங்கி வைத்துப் பாதியில் கைவிட்ட அந்தமான் கனவை நிஜமாக்கியவர் அவர்தான்.
வால்கர் குழுவினரின் கப்பல் அந்தமான் சென்று சேர்ந்தபோது அவர்களுக்கு ஏகப்பட்ட வேலைகள் காத்திருந்தன. ப்ளெய்ர் குழுவினர் கிளம்பிச் சென்று அறுபது ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. முன்பு அவர்கள் ஒழுங்குபடுத்தியிருந்த நிலப் பகுதிகளையெல்லாம் மீண்டும் செடிகொடிகள், புதர்கள், மரங்கள் ஆக்கிரமித்திருந்தன. அவற்றையெல்லாம் அழித்துவிட்டுப் புதிய குடியிருப்புகளை அமைப்பது சவாலாக இருந்தது.
மேலும், முன்பு ப்ளெய்ர் குழுவினர் தங்கியிருந்த இடத்தில் இப்போது கடுமையான தண்ணீர்த் தட்டுப்பாடு இருந்தது. ஆகவே சற்றுத் தொலைவிலிருந்த ராஸ்என்ற இன்னொரு தீவைத் தேர்ந்தெடுத்து அங்கே குடியிருப்புகள் அமைக்கும் வேலைகளைத் தொடங்கினார் டாக்டர் வால்கர்.
கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டடங்கள் அமையத் தொடங்கியவுடன் வால்கர் இந்தியாவுக்குத் தகவல் அனுப்பினார். இங்கே இன்னும் நிறைய வேலைகள் இருக்கின்றன. இருநூறு கைதிகளை வைத்துக்கொண்டு இத்தனையையும் சமாளிப்பது சிரமம். இந்தத் தீவில் காலநிலை சரியில்லை. கைதிகளுக்குத் திடீர் திடீரென்று ஏதாவது வியாதி வருகிறது. வேலை செய்யமுடியாமல் சுருண்டு படுத்துவிடுகிறார்கள். படுத்தவர்கள் எழுந்திருப்பதில்லை. போதாக்குறைக்குக் காடுகளில் உள்ள பூச்சி புழுக்கள் ரத்தம் உறிஞ்சும் அட்டைகளின் தொல்லை. அவ்வப்போது பழங்குடியினரின் தாக்குதல்.
டாக்டர் வால்டர்! புலம்பியது போதும். இப்போது உங்களுக்கு என்ன வேண்டும்?
வேலை செய்வதற்கு இன்னும் நிறையக் கைதிகள் வேண்டும்!
அவ்வளவுதானே? இந்தியாவில் கைதிகளுக்கா குறைச்சல்? உடனடியாக அனுப்பிவைக்கிறோம்!
நல்லது. நோஞ்சான் கைதிகளையெல்லாம் கழித்துக்கட்டிவிட்டு நல்ல பயில்வான்களாகப் பார்த்து அனுப்பிவையுங்கள் என்றார் வால்கர்.
இங்கே வருகிறவர்கள் கொஞ்சமாகச் சாப்பிட்டுவிட்டு நிறைய வேலை செய்கிறவர்களாக இருக்கவேண்டும். அப்போதுதான் நம்முடைய குடியிருப்புகளை விரைவாகத் தயார் செய்யலாம். சென்றமுறை நிகழ்ந்ததுபோல் எந்த அசம்பாவிதமும் இல்லாமல் பார்த்துக்கொள்ளலாம்
இதன்படி இந்தியச் சிறைகளில் இருந்த பெரும் குற்றவாளிகள், நல்ல பலசாலிகள், உடல் தகுதி கொண்டவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அந்தமானுக்கு அனுப்பிவைக்கப்பட்டார்கள். மூன்றே மாதங்களில் அங்கே குடியேற்றப்பட்டவர்களுடைய எண்ணிக்கை எழுநூறைத் தாண்டிவிட்டது.
இப்படி வந்தவர்களில் சிலர் கொலை, கொள்ளைக் குற்றவாளிகள், முரட்டுப் பேர்வழிகள். மற்றவர்கள் சுதந்தரப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காகக் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகள்.
ஆனால் அந்தக் காலத்தில் அரசியல் கைதிகளுக்கென்று அந்தமானில் சிறப்பு மரியாதை கிடையாது. எல்லோர் தலையிலும் கடுமையான வேலைகள் சுமத்தப்பட்டன. மரங்களை வெட்டி வீழ்த்திக் காடுகளைச் சமதளமாக்கவேண்டும். அங்கே குடியிருப்புகளை அமைக்கவேண்டும். வெய்யில், குளிர், மழை என்றெல்லாம் பேசக்கூடாது. வேலை, வேலை, வேலை, வேறு சிந்தனையே இல்லாமல் உழைக்கவேண்டும்.

****
அந்தமானில் குடியிருப்புப் பகுதிகளெல்லாம் ஓரளவு தயாராகிவிட்டன. ஆகவே புதிய கைதிகளுக்குக் காட்டை அழிக்கிற கடுமையான வேலைகளெல்லாம் பெரும்பாலும் இல்லை. முதலில் கொஞ்ச நாள் அவர்களைக் காவலர்களுடைய கண்காணிப்பில் அடைத்துவைப்பார்கள். அங்கே வம்பு எதுவும் செய்யாமல் ஒழுங்காக இருந்தால் சுதந்தரமாக வெளியே வாழ்வதற்கான அனுமதி கிடைத்துவிடும்.
சுதந்தர டிக்கெட் வாங்கியவர்கள் அந்த ஊர் மண்ணுக்கு ஒத்துப்போகக்கூடிய பயிர்களை வைத்து விவசாயம் செய்யலாம். சாலைகள் அமைப்பது, தென்னை மரங்களைப் பாதுகாப்பது, தேங்காய் பறிப்பது, அதிலிருந்து நார், எண்ணெய் எடுப்பது, மரங்களை வெட்டிப் பலகைகள் செய்வது, தொழிற்சாலை வேலைகள் போன்றவற்றில் ஈடுபடலாம். விருப்பமுள்ளவர்கள் தங்களுடைய குடும்பத்தினரைக்கூட இங்கே அழைத்துவந்து செட்டிலாகிக்கொள்ளலாம்.
இதென்ன? கேட்பதற்கு ஜெயில்மாதிரியே இல்லையே!
ஆங்கிலேயர்களுக்கும் அதே குழப்பம்தான். அந்தமானை முன்னேற்றுகிறோம் பேர்வழி என்று நாம் சிறைத்தண்டனையை வெளிநாட்டு பிக்னிக் மாதிரி மாற்றிவிட்டோமோ என்று குழம்பினார்கள்.
அந்தமானுக்கு நாடு கடத்தப்படுவதென்பது இனிமேலும் ஒரு தண்டனை அல்ல. லேசான அசௌகர்யம். அவ்வளவுதான்.
இது ரொம்பப் பெரிய ஆபத்து என்று ல்யாலும் லீத்ப்ரிட்ஜும் அடித்துச் சொன்னார்கள். அந்தமானுக்குத் துரத்தப்படுவது அப்படியொன்றும் பெரிய பிரச்னை இல்லை என்று தப்புச் செய்கிறவர்கள் நினைக்க ஆரம்பித்துவிட்டால் அவ்வளவுதான். அவர்கள் பெரிய குற்றங்களைச் செய்யத் தயங்கமாட்டார்கள். சுதந்தரப் போராட்டத்தில் ஈடுபடுகிறவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிவிடும். ஆகவே நாம் உடனடியாக அந்தமானை ஒரு கொடிய உருவமாக மாற்றியமைக்கவேண்டும். அந்தமானுக்குத் துரத்தப்படுவது தூக்குத் தண்டனையைவிடப் பெரிய அவஸ்தை என்று தப்புச் செய்கிறவர்கள் நினைக்கவேண்டும். அதற்கு என்ன வழி?
அந்தமானில் நிஜமான சிறைச்சாலை என்று எதுவுமே இல்லை. அதை முதலில் கவனிக்கவேண்டும். இந்தியாவிலிருந்து வருகிறவர்களைக் கொஞ்சக்காலத்துக்காவது நாலு சுவர்களுக்குள் அடைத்து வைத்துத் தனிமைப்படுத்தவேண்டும். அவர்களுக்குக் கஷ்டமான வேலைகளைக் கொடுக்கவேண்டும். அதைச் செய்யாவிட்டால் கடுமையான தண்டனை அளிக்கவேண்டும்.
ல்யால்  லீத்ப்ரிட்ஜ் கமிட்டியின் பரிந்துரைகளை பிரிட்டிஷ் இந்திய அரசாங்கம் ஏற்றுக்கொண்டது. அந்தமானில் ஒரு புதிய சிறைச்சாலை கட்டுவதற்கு ஒப்புதல் அளித்தது.
1893ம் வருடம் சுமார் ஐந்தரை லட்ச ரூபாய் செலவில் அந்தமான் சிறைச்சாலையை அமைப்பதற்கான உத்தரவு வெளியானது. ஆனால் அந்தத் திட்டம் செயல்வடிவம் பெறுவதற்கு இன்னும் மூன்று வருடங்கள் பிடித்தன. 1896ம் வருடம்தான் சிறைச்சாலைக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கின. ஏற்கெனவே அங்கே சிறைப்பட்டிருந்த கைதிகளே இந்த வேலைகளில் ஈடுபட்டார்கள்.

No comments:

Post a Comment