Search This Blog

Thursday, August 22, 2013

மறக்க முடியாத மனிதர்கள்

மறக்க முடியாத மனிதர்கள்
வண்ணநிலவன்
விலை : 150/-
பக் : 152




இணையத்தில் இந்தப் புத்தகத்தை வாங்க

இலக்கிய உலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருக்கும் வண்ணநிலவன் தன் வாழ்வில் சந்தித்த தன் மீது செல்வாக்கு செலுத்திய ஆளுமைகள் பற்றிப் பகிர்ந்துகொண்டிருக்கும் தொகுப்பு இது.

வல்லிக்கண்ணன், ‘விக்ரமாதித்யன்’ என்ற நம்பிராஜன், வண்ணதாசன், ஜே.பி. என்ற பா. ஜெயப்பிரகாசம், கலாப்ரியா, கி. ராஜநாராயணன், திருலோக சீதாராம், நா. வானமாமலை, வெ. கிருஷ்ணமூர்த்தி,  தி.க.சி என்ற தி.க. சிவசங்கரன், ஜி.எம்.எல். பிரகாஷ், சுந்தர ராமசாமி, பிரபஞ்சன், ‘அம்பை’ (சி.எஸ். லெட்சுமி), அசோகமித்திரன், ‘ தீபம்’ நா. பார்த்தசாரதி,  க.நா.சு.,  தி. ஜானகிராமன், சோ ஆகியோர் பற்றிய தன்னுடைய அனுபவங்களை, நினைவுகளை இந்த நூலில் உணர்வுபூர்வமான நடையில் விவரித்திருக்கிறார்.

புத்தகத்திலிருந்து

நாகர்கோவில் போனால் உமாபதியைப் பார்க்கலாம், அவருக்கு எப்படியும் சுந்தர ராமசாமியைத் தெரிந்திருக்கும், சுந்தர ராமசாமியைப் பார்த்துவிட்டு இரவே ஊருக்குத் திரும்பிவிடலாம் என்று நினைத்து, ஒரு நாள் காலை நாகர்கோவிலுக்குப் பஸ் ஏறினேன். பதினொன்றரை மணி சுமாருக்கெல்லாம் நாகர்கோவில் போய்ச் சேர்ந்துவிட்டேன்.
நாகர்கோவில் மணிக்கூண்டுக்கு அருகே வடக்கே சில கட்டடங்கள் தள்ளி சுதர்ஸன் டெக்ஸ்டைல்ஸ் இருக்கிறது. மணிக்கூண்டுக்கு தெற்கே சிறு சந்தினுள் உமாபதி வேலை பார்த்த சென்ட்ரல் பேங்க் இருந்தது. ராமசாமியை நேரில் சென்று பார்க்க கூச்சமாகவும் பயமாகவும் இருந்தது. உமாபதியுடன் ஏற்கெனவே சிறு தொடர்பு ஏற்பட்டிருந்ததால் கொஞ்சம் தயக்கமில்லாமல் அவரைச் சந்திக்க முடிந்தது. உமாபதி, உடனேயே அலுவலகத்தில் சொல்லிவிட்டு வெளியே வந்தார். ராமசாமி வீட்டிலிருந்தார். வீட்டுக்குப் போனோம்.
இப்போதும் அவருடைய வீட்டின் முன் பகுதியில் அந்த விசாலமான ரெட்டைத் திண்ணைகளும், திண்ணைகளைத் தாண்டிச் சென்றால் இதமான இருட்டும் குளிர்ச்சியும் மிக்க அந்த ஹாலும் அப்படியேதான் இருக்கின்றன. நாகர்கோவில் ஊர் பூராவுமே செம்மண் தரையாலானது. ராமசாமியின் வீட்டைச்சுற்றி இரண்டு அம்பாஸிடர்கள் ஒன்றாகச் செல்லுகிற அளவுக்கு இடமுண்டு. வீட்டின் பின்புறம் மிக நீண்ட தோட்டம். வீட்டின் முன்னே மொட்டை மாடிச் சுவர்மீது ஒரு கிருஷ்ணன் பொம்மை நிற்கும். மாடியில் விருந்தினர்கள் தங்குவதற்கான, வசதியான இரண்டு அறைகளைக் கொண்ட தங்குமிடம். வீட்டினுள்ளே ஹாலின் கீழ்ப்புறம் திண்ணையிலிருந்து நீளும் மிக நீளமான இரட்டை அறைகள். அறைச்சுவர்கள் முழுக்க பீரோக்களில் புஸ்தகங்கள். ஹாலின் மேற்குப்புற அறையில்தான் குழந்தைகள் இருந்தனர். அந்த அறையிலிருந்து எப்போதும் சிரிப்பும் குதூகலச் சத்தங்களும் கேட்டுக்கொண்டே இருக்கும். நான் ராமசாமியைப் பார்க்கிறபோது, அகாலத்தில் மறைந்துவிட்ட அவரது மூத்த பெண் சௌந்திராவுக்குப் பன்னிரெண்டு வயதிருக்கலாம். அடுத்தவள் தைலா. மூன்றாவது கண்ணன் (இப்போது காலச்சுவடு ஆசிரியர்.), நான்காவது கடைக்குட்டியான தங்கு, வீட்டு மாடியிலிருக்கிற கிருஷ்ணன் பொம்மை மாதிரியே வளைய வந்துகொண்டிருப்பாள். பிள்ளைகள் எல்லோருமே அப்பாவையும் அம்மாவையும் போல் ரொம்பப் பிரியமாக இருப்பார்கள்.
மதிய உணவெல்லாம் முடிந்து ராமசாமியுடன் கடையின் உள்ளே உள்ள சிறு அறையில் பேசிக்கொண்டிருந்தேன். சாயந்திரம் நாலு மணி சுமாருக்குப் புறப்பட்டேன்.
இப்பம் ஊர்லே போயி என்ன பண்ணப் போறீரு?.... இருந்துட்டுப் போலாமே’  என்றார்.
இல்ல... அப்படியே கிளம்பி வந்துட்டேன்...
அதனால என்ன?’
அவருக்கு என்னை விடுவதற்கு இஷ்டமில்லை.
ஊர்ல ஒண்ணும் அவசர ஜோலி ஒண்ணும் இல்லியே?’
அதெல்லாம் இல்ல...
பின்ன என்னவே?....’
அந்தச் சிறு உள் அறையில் நாங்கள் எதிரும் புதிருமாக உட்கார்ந்திருந்த மேஜைமீது கண்ணாடிக்குக் கீழே விவேகானந்தரின் படமிருந்தது. அதையே பார்த்துக் கொண்டிருந்தேன். கடைக்குப் பின்புறம் ஹோட்டல். அந்த அறையில் உட்கார்ந்திருந்தால் ஹோட்டலுக்கு வருகிறவர்கள் போகிறவர்களையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கலாம்.
அன்று இரவு பத்துப் பதினோரு மணிவரை ராமசாமியுடன் உமாபதியும் நானும் பேசிக்கொண்டிருந்தோம். இடையே வடிவீஸ்வரத்தில் இருந்து வந்த ராமசாமியின் நெருங்கிய ஸ்நேகிதர்களில் ஒருவரான பத்மநாபனும் வந்திருந்தார். சமையல்கார ஐயர் ஒரு பிரியமான மனிதர். அந்த வீட்டு ஆட்களிலேயே ஒருவராகிவிட்டவர். அவரும் சாப்பிடும்போது பேச்சில் கலந்துகொள்வார். ராமசாமியின் மனைவியும் அருகிலேயே இருப்பார். பேச்சினிடையே நான் சாயந்திரம் ஊருக்குக் கிளம்பியதுபற்றிப் பேச்சு வந்தது. கமலா... ஆளைப் புடிச்சு வச்சிருக்கேனாக்கும்...’  என்று ராமசாமி வாஞ்சையும் கிண்டலும் கலந்து சொன்னார். முப்பது வருடங்களாகிவிட்டன. அப்போது ஒன்பது மணிக்கெல்லாம் ராமவர்மாபுரம் அறவே அடங்கிவிடும். நானும் உமாபதியும் சாப்பாட்டுக்குப் பிறகு சிறிது நேரம் திண்ணையில் காற்றாட உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த பிறகு புறப்பட்டோம். உமாபதியின் வீடு சிறிது தூரத்தில் சற்றுப் பள்ளமான பகுதியில் இருந்தது. உமாபதியின் மனைவி ஊருக்குச் சென்றிருந்தார். ஆளரவமே இல்லாத தெருக்களில் உமாபதியும் நானும் நடந்துபோனது மனத்துக்கு ரம்யமாக இருந்தது.
காலையில் போய்விட்டு இரவு திரும்பிவிடலாம் என்று போனவன் ஏறத்தாழ பத்து நாள்களுக்கு மேல் இருந்தேன். உமாபதி தன் வேட்டி சட்டைகளைத் தந்தார். ராமசாமி தன் கடையிலிருந்து புதுச்சட்டை வேட்டி தர விரும்பினார். அதேசமயம், எடுத்ததுக்கெல்லாம் சங்கோஜப் படுகிறவனாகவும் இருக்கிறானே என்ற தயக்கமும் அவருக்கு இருந்தது. அதனால் என்னை வற்புறுத்தவில்லை. என் போக்கிலேயே விட்டுவிட்டார். 





No comments:

Post a Comment