Search This Blog

Friday, February 15, 2013

மௌனத்தின் அலறல்

இந்தியப் பிரிவினை என்பது நமக்கு நன்கு தெரிந்த ஒரு வரலாற்று நிகழ்வு. இதை வெறும் புள்ளிவிவரங்களாகவும் அரசியல் நிகழ்வுகளாகவும் பலரும் பதிவு செய்துள்ளனர். சிலர் கதைகளாகவும் பதிவு செய்துள்ளனர். குஷ்வந்த் சிங்கின் பாகிஸ்தான் போகும் ரயில் அப்படிப்பட்ட ஒரு கதைப் பதிவு. அதனை சென்ற ஆண்டு கிழக்கு பதிப்பகம் தமிழாக்கம் செய்து கொண்டுவந்திருந்தது. இந்தியப் பிரிவினை பற்றிய ஒரு வரலாற்றுப் புத்தகத்தையும் கிழக்கு முன்னதாகக் கொண்டுவந்திருக்கிறது.

ஆனால் ஊர்வஷி புட்டாலியா எழுதியுள்ள புத்தகம் சற்றே வித்தியாசமானது. இது மக்களின் குரல்கள்மூலம் பிரிவினையின்போது நடந்த நிகழ்வுகளை முன்வைக்கிறது. ஊர்வஷி புட்டாலியாவை நான் நன்கு அறிவேன். பெண்ணியவாதி. சிறு பதிப்பாளர். எழுத்திலும் புத்தகப் பதிப்புத் துறையிலும் பல ஆண்டுகளாக ஈடுபட்டுவருபவர்.

பிரிவினையின்போது எண்ணற்ற மக்கள் வீடிழந்தனர். கொல்லப்பட்டனர். பெண்கள் முக்கியமாகத் திருடப்பட்டனர். வன்கலவிக்குப்பின் கொல்லப்பட்டனர். பலர் அடிமைகளாக தன்னை நாசம் செய்தவனுடனேயே வசித்து பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டு இருக்கவேண்டியிருந்தது.

ஊர்வஷி இதுபோல பாதிக்கப்பட்டு உயிருடன் இருக்கும் பலரைச் சந்தித்து, அவர்களுடைய கதைகளைச் சொல்வதன்மூலம் பிரிவினையின்போது என்ன நடந்தது என்பதை நம்மைப் புரிந்துகொள்ள வைக்கிறார்.

இன்று, 2012-13-ல்கூட பல நகரங்களில் பெண்கள் தைரியமாக வெளியே போகமுடிவதில்லை. கடுமையான பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். ஆண்கள் கூட்டமாகச் சேர்ந்து மிருகங்கள்போல தனியான பெண்கள்மீது விழுந்து தாக்குகிறார்கள். பிரிவினையின்போது இந்த வெறிகொண்ட கூட்டங்கள் (இரு பக்கத்திலுமே) எப்படி நடந்துகொண்டிருக்கும் என்று நீங்கள் ஓரளவுக்கு ஊகிக்கலாம். உண்மை அதைவிடப் பதைபதைப்பானது.

மௌனமாகக் கிடந்த அலறல்களை இந்தப் புத்தகம் ஓரளவுக்கு வெளிக்கொணர்கிறது. The Other Side of Silence என்று ஆங்கிலத்தில் வெளியான இந்தப் புத்தகத்தை கே.ஜி. ஜவர்லால் மிக நேர்த்தியாகத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

புத்தகத்தை வாங்க

பக்கங்கள்: 352
விலை: ரூ. 250/-

No comments:

Post a Comment