Search This Blog

Friday, February 15, 2013

அணு மின்சாரம்: அவசியமா, ஆபத்தா

கூடங்குளம் அணு மின் நிலையம் தொடர்பாக நாட்கணக்கில் கூடங்குளம்/இடிந்தகரை பகுதியில் போராட்டம் நடந்துவருகிறது. எஸ்.பி.உதயகுமார் தலைமை ஏற்று நடத்திவரும் இந்தப் போராட்டம், மிக முக்கியமானது. அணு மின் நிலையங்கள் அமைப்பதற்கு எதிரான இயக்கங்கள் இந்தியா முழுதும் ஆங்காங்கே நடந்துவருகின்றன.

அணு மின் நிலையங்கள் ஆபத்தானவை, அந்தப் பகுதியையே அழித்துவிடக் கூடியவை, அணுக் கழிவுகளை எப்படி அப்புறப்படுத்தி அழிப்பது என்பது தொடர்பாக அறிவியலாளர்களிடம் எந்தத் தீர்வும் இல்லை, கல்பாக்கம் உட்பட்ட இந்திய அணு மின் நிலையங்களில் தொடர்ந்து பல விபத்துகள் நடந்துவருகின்றன; ஆனால் அவை மூடி மறைக்கப்படுகின்றன, மூன்று மைல் தீவுகள், செர்னோபில், ஃபுகுஷிமா போன்ற விபத்துகள் இந்தியாவில் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம், அணு எரிபொருள்களுக்கான கச்சா தாதுக்களை வெட்டி எடுக்கும் இடங்களிலும் அவற்றைப் பண்படுத்தும் இடங்களிலும் ஏகப்பட்ட அப்பாவி மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றெல்லாம் அணு உலை எதிர்ப்பாளர்கள் பேசிவருகிறார்கள்.

அணு உலை எதிர்ப்புப் புத்தகங்கள், கையேடுகள் எனத் தமிழில் ஏகப்பட்டவை வெளியாகியுள்ளன. இந்தப் புத்தகக் கண்காட்சியிலும்கூட இதுதான் நிலை.

இதற்கு மாறாக, இந்திய அணு சக்தித் துறையானது பொதுமக்களிடம் பேசுவதே இல்லை. அவர்களுடைய நோக்கமே, ‘எங்களுக்குத் தெரியும், எல்லாம் சரியாக உள்ளது. எனவே வாயை மூடிக்கொண்டு உங்கள் வேலையைப் பாருங்கள்’ என்பதாகவே உள்ளது துரதிர்ஷ்டமே.

சௌரவ் ஜா எழுதி இரு ஆண்டுகளுக்குமுன் வெளியான The Upside Down Book of Nuclear Power என்ற புத்தகம் அணு சக்திக்கு ஆதரவான ஒன்று. அணு சக்திக்கு எதிரான புத்தகத்தை எழுதிவிடுவது சுலபம். ஆனால் ஆதரவாக ஒரு புத்தகத்தை எழுதுவது என்பது மிக மிகக் கடினம் என்பதையே அவ்வாறு வெளியாகியுள்ள புத்தகங்களின் எண்ணிக்கையை வைத்தே சொல்லிவிடலாம். முந்தைய புத்தகங்கள் படிப்போரின் உணர்ச்சிகளை மட்டுமே தீண்டக்கூடியவை. ஆனால் பிந்தைய புத்தகங்கள் நடுநிலையுடன் இந்தச் சிக்கலை அணுகவேண்டும். அணு சக்தித் துறையில் என்னென்ன பிரச்னைகள் உள்ளன என்ற உண்மையை முன்வைக்கவேண்டும். ஃபுகுஷிமாவில் ஏன் விபத்து நடந்தது என்று விளக்கியாகவேண்டும். அதேபோன்ற பிரச்னைகள் இந்தியாவில் ஏற்படாமல் இருக்க என்னவெல்லாம் செய்யப்பட்டுள்ளது என்று விளக்கவேண்டும். அப்படியே இந்திய அணு உலைகளில் ஏதேனும் விபத்து ஏற்பட்டாலும் அந்த விபத்தின் விளைவுகள் என்னவாக இருக்கும் என்று சொல்லவேண்டும். அணுக் கழிவுகளை என்னதான் செய்வது என்று பேசியே ஆகவேண்டும். உண்மையில் அணுக்கழிவுகள் என்றால் என்ன என்பதிலிருந்து ஆரம்பிக்கவேண்டும்.

சௌரவ் ஜா இதனை மிக அழகாகக் கையாள்கிறார். ஆற்றல் துறை ஆலோசகராக இருக்கும் இவர் எழுதிய முதல் புத்தகம் இது என்பது ஆச்சரியத்தைத் தருகிறது.

நான் அணு சக்தித் துறையின் தலைவனாக இருந்தால், இந்தப் புத்தகத்தை வேண்டிய பிரதிகள் வாங்கி, அணு சக்தி குறித்து பயம் கொள்வோர் அனைவருக்கும் இலவசமாக விநியோகிப்பேன். அப்படி நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் கம்மி என்பதால் அணு சக்தியில் ஆர்வம் கொண்டோர் இந்தப் புத்தகத்தைக் காசு கொடுத்து வாங்கிப் படித்தாகவேண்டும். இந்தப் புத்தகத்தைப் படிப்பதற்கு பெரும் அறிவியல் அறிவு ஏதும் தேவையில்லை. படிக்க எளிதான மொழியிலேயே எழுதப்பட்டுள்ளது; மொழிமாற்றமும் எளிதாகவே உள்ளது.

இந்தப் புத்தகத்தை வாங்கிப் படிப்பவர்கள், படித்தபின் புத்தகத்தை உங்கள் நண்பர்களுக்குக் கொடுத்துப் படிக்கச் சொல்லுங்கள்.


புத்தகத்தை வாங்க

ஆசிரியர்: சௌரவ் ஜா
தமிழாக்கம்: சுந்தரேச பாண்டியன்
பக்கங்கள்: 288
விலை: ரூ. 200/-

No comments:

Post a Comment