Search This Blog

Friday, February 15, 2013

இந்தியன் ஆவது எப்படி?

நான் சமீபத்தில் படித்த புத்தகங்களில் என்னை மிகவும் கவர்ந்தது பவன் வர்மா எழுதிய 'Becoming Indian' என்ற ஆங்கிலப் புத்தகம். இவர் எழுதி சில ஆண்டுகளுக்குமுன் வெளியாகியிருந்த 'Being Indian' என்ற புத்தகத்தையும் படித்துள்ளேன்.

பவன் வர்மா, இந்திய மனநிலையை ஆராய்கிறார். நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்ட இந்திய கலாசாரம் எவ்வாறு காலனிய காலத்தில் மனத்தளவில் அடிமையானது என்பதை ஆராய்வதுதான் அவருடைய நோக்கம். பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவின் பெரும்பகுதியைத் தன்வசப்படுத்தியதும், இப்பகுதியை ஆட்சி செய்யவேண்டிய கட்டாயம் அதற்கு ஏற்பட்டது. அதன் ஆட்சிக்காலத்தின் முற்பகுதியில் இந்தியா வந்த பல ஆட்சியாளர்களும் சமஸ்கிருத மொழி, இந்திய கலாசாரம் ஆகியவற்றால் பெரிதும் ஈர்க்கப்பட்டார்கள். இந்தக் கீழையியல் விரும்பிகள் இந்திய கலாசாரத்தின் தொன்மையை மிகவும் மதித்தனர். இந்தியாவைப் பொருளாதாரரீதியில் சுரண்டி தம்முடைய கம்பெனிக்கு வளம் சேர்க்கவேண்டும் என்பதி அடிப்படை நோக்கமாக இருந்தாலும் அதே நேரம் இங்குள்ள கலாசாரத்தை ஆங்கிலத்துக்குக் கொண்டுசென்று, அதன்மூலம் உலகம் முழுதும் கொண்டுசேர்க்கவேண்டும் என்பதும் அவர்களுடைய விருப்பமாக இருந்தது. வாரன் ஹேஸ்டிங்ஸ் முதற்கொண்டு இந்தப் பணியில் ஈடுபட்டனர்.

இன்று நாம் நம்முடைய தொன்மைகளாக உணர்ந்திருக்கும் வேதங்கள், உபநிடதங்கள், தத்துவ இலக்கியங்கள், பகவத் கீதை, சமஸ்கிருத இலக்கணமான அஷ்டாத்யாயீ, இதிகாசங்களான ராமாயண மகாபாரதம் தொடங்கி, தமிழ், தெலுங்கு முதலான எண்ணற்ற மொழிகளுக்கு அகராதிகள், இலக்கணப் புத்தகங்கள், இவற்றில் உள்ள பல்வேறு இலக்கியங்களுக்கான ஆங்கில மொழியாக்கம் என்று பிரிட்டிஷ்காரர்களுடைய கொடை மிக நீண்டது. இன்று நாம் பெருமைப்பட்டுக்கொள்ளும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பிரமி எழுத்துகளை மீண்டும் படிக்கச் சொல்லிக்கொடுத்தது கிழக்கிந்தியக் கம்பெனி அதிகாரி ஒருவரே. இந்தியாவின் பல்வேறு புராதன கலாசாரச் சின்னங்களான கோவில்கள், சிந்து-சரசுவதி நதிக்கரை நகரங்கள், அசோகரின் தூண்கள் என அனைத்தையும் அவற்றின் உண்மையான பொருள் என்ன என்பதோடு நமக்குச் சுட்டிக்காட்டியது ஆங்கிலேயர்களே.

ராஜராஜன் என்ற அரசன் இருந்து தஞ்சைப் பெரிய கோவில் என்ற மாபெரும் படைப்பை உருவாக்கியதையும், அசோகர் என்ற பேரரசர் தன் பரந்து விரிந்திருந்த சாம்ராஜ்ஜியத்தின் ஒரு கோடி முதல் மறு கோடி வரை எண்ணற்ற தூண்களைக் கட்டித் தன் கட்டளைகளைப் பிறப்பித்திருந்ததையும், பல்லவர்கள் மாமல்லபுரம் என்ற மாபெரும் சிற்ப நகரை நிர்மாணித்திருந்ததையும், உலகப் புகழ்பெற்ற இந்திய ஓவியங்கள் அடங்கிய அஜந்தா குகைகளையும் மீள்கண்டெடுத்து நமக்குத் தந்தது பிரிட்டிஷாரே.

ஆனால் கிழக்கிந்தியக் கம்பெனியின் பிற்காலத்தில் வந்த பிரிட்டிஷ் அதிகாரிகள், இந்தியக் கண்டுபிடிப்புகளும், இலக்கியங்களும், கலைகளும் குப்பைகள், எவற்றுக்கும் உதவாதவை என்ற கருத்தைக் கொண்டிருந்தார்கள். மெக்காலேயை இதற்குப் பெரிய உதாரணமாகச் சொல்லலாம். கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியில் இந்தியர்கள் எம்மாதிரியான கல்வியைக் கற்கவேண்டும் என்பதை முடிவெடுப்பதில் அவர் முக்கியமானவராக இருந்தார். வெகு சில நாட்களே அவர் இந்தியாவில் தங்கியிருந்தாலும் அவர் விட்டுச் சென்ற தாக்கம் இன்றளவும் இந்தியர்களைப் பாதித்துவருகிறது.

ஆங்கில மொழி, ஆங்கிலேயர்கள் தூக்கிப் பிடித்த விழுமியங்கள் என்று தொடங்கிய அந்தக் கல்விமுறை இன்று இந்தியர்களைத் தன் கிடுக்கிப் பிடியில் வைத்துள்ளது. தன் பாரம்பரியம் என்பதே கீழானது, தன் எஜமானர்களாகிய ஆங்கிலேயர்களின் பாரம்பரியமும் கலாசாரமும் மொழியுமே உயர்ந்தவை என்ற கருத்து இந்தியர்கள்மீது திணிக்கப்பட்டது; இந்தியர்களும் விரும்பி இதனை ஏற்றுக்கொண்டார்கள்.

இந்நிலையில் இந்தியா என்பது என்ன, இந்தியர் என்பவர் யார், காலனியத்தால் வெற்றிகொள்ளப்பட்ட ஒரு நபர் மீண்டும் இந்தியன் ஆவது எப்படி என்பதை ஆராய முற்படுகிறது இந்த நூல்.

நூலாசிரியர் பவன் வர்மா, தற்போது பூட்டானுக்கான இந்தியத் தூதராக உள்ளார். இந்திய அயல்துறை பணியில் இருப்பவர். சைப்ரஸ் நாட்டுக்கான இந்தியத் தூதராக இருந்துள்ளார்.

இந்தியாவின் சமூக வரலாற்றை பொதுமக்கள் புரிந்துகொள்ளும் அளவுக்கு எளிமையாகக் கொடுத்துள்ளார். இந்தப் புத்தகத்தைத் தமிழாக்கம் செய்திருப்பவர் எஸ். கிருஷ்ணமூர்த்தி.

புத்தகத்தை வாங்க

பக்கங்கள்: 384
விலை ரூ. 250

No comments:

Post a Comment