Search This Blog

Friday, June 7, 2013

மறைந்துபோன மார்க்சியமும் மங்கிவரும் மார்க்கெட்டும் - குருமூர்த்தி

எஸ்.குருமூர்த்தி, அரசியல், பொருளாதாரச் சிந்தனையாளர். மார்க்சியம், மார்க்கெட் பொருளாதாரம் ஆகியவை பற்றிய அவருடைய சமீபத்திய புத்தகத்திலிருந்து ஒரு சிறு பகுதி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க இங்கு செல்லவும். ஃபோன் மூலம் வாங்க, டயல் ஃபார் புக்ஸ் 94459-01234.

***

மார்க்ஸியச் சிந்தனையின் ஊற்றுக்கண் என்று ஹெகலைக் கருதலாம். ஆனால் மார்க்ஸுக்கும் ஹெகலுக்கும் இடையே உள்ள தொடர்பு இத்தோடு நின்றுவிடுகிறது. மார்க்ஸ் தன் கருத்தியலின் மிச்சப் பகுதியான புரட்சிக்கு வேறு மூலங்களைத் தேடவேண்டியிருந்தது. சோஷலிசம், வளங்களின் பொதுவுடைமை, கம்யூனிசப் புரட்சிக்கான மாதிரி என அனைத்தையும் மார்க்ஸ், கிறிஸ்தவ உலகின் இடைநிலைக் காலப் புரட்சியிலிருந்து தனக்குப் பொருத்தமாக எடுத்தாண்டார். அவற்றை, ஜெர்மனியின் அனாபாப்டிஸ்டுகளின் அனுபவத்திலிருந்து அவர் எடுத்துக்கொண்டார்.

மார்க்ஸ் பிற்காலத்தில் தொகுத்த கட்டமைப்பு இல்லாமலேயே 1534-ம் வருடம் ஜெர்மனி நாட்டின் வெஸ்ட்ஃபாலியாவின் மன்ஸ்டர் நகரில் ஒரு கம்யூனிசப் புரட்சி நடந்தேறியது.

தொடக்க காலக் கம்யூனிசப் புரட்சியை கொண்டுவந்த சமயப் புரட்சியாளர்கள் ‘அனாபாப்டிஸ்டுகள்’ என்று அழைக்கப்பட்டனர். அனாபாப்டிஸ்டு என்றால் மீண்டும் ஞானஸ்நானம் செய்யப்பட்டவர் (மீண்டும் கிறிஸ்தவராகப் பிறந்தவர்) என்று பொருள். மார்க்ஸியத் தத்துவத்தின் உருவாக்கமும் புரட்சிக்கான கருத்தியலும், ஒரு கிறிஸ்தவ சமயத் தோன்றல் என்பதைப் புரிந்துகொள்ள அனாபாப்டிஸ்டுகள் எப்படி உருவானார்கள் என்று அறிந்துகொள்ளவேண்டியது அவசியம். அனாபாப்டிஸ்டுகளின் வருகையை உள்வாங்கிக்கொள்ள கிறிஸ்தவர்களின் நம்பிக்கையான ‘எஸ்கட்டாலஜி’ எனும் இறுதித் தீர்ப்பு அல்லது காலத்தின் முடிவு பற்றி நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

பூமியில் ஆண்டவனின் ஆட்சி நிறுவப்பட்டு உலகம் அழியப்பெறும் என்பதையே இந்த நம்பிக்கை முன் நிறுத்துகிறது. ஆண்டவனின் ஆட்சி எப்போது பூமியில் நிறுவப்படும்? உலகம் முழுவதும் கிறிஸ்தவமயமாக்கப்பட்ட பின்பு, வேறு எந்தச் சமயமும் பூமியில் இல்லாதபோது இது நடக்கும். இந்த முழுமை பெற்ற ஆட்சியும் சமுதாயமும்தான் ஹெகலுக்கு ஊக்கம் அளித்ததா? உலகின் முடிவுக்கான கிறிஸ்தவ சமயவியல் அடிப்படையைப் புரிந்துகொள்ளாமல், அனாபாப்டிஸ்ட் புரட்சியின் பின்னணியை நம்மால் புரிந்துகொள்ள முடியாது.

ஐரோப்பிய வரலாற்றுப் பாதை முழுவதிலும், ஓர் ஒற்றைச் சிந்தனை பல நூற்றாண்டுகளாக அரசியல், சமய அமைப்புகளை இயக்கிக்கொண்டிருக்கிறது. அது விவிலிய நம்பிக்கையான உலகத்தின் முடிவு எனப்படும் எஸ்கட்டாலஜி. கிறிஸ்தவ உலகின் பல சிந்தனையாளர்கள் பல்வேறு சமயங்களில், உலகின் முடிவு நெருங்கிவிட்டது என்று நம்பினார்கள். ஆனால் அது நடக்குமுன், சரியாகச் சொல்வதானால் அது நடக்கவேண்டுமானால், ஏசு கிறிஸ்து திரும்பவும் வந்து பூமியில் ஆண்டவனின் ஆட்சியை நிறுவி இந்த உலகை ஆயிரம் ஆயிரம் காலம் ஆட்சி செய்வார் என்று நம்பப்பட்டது. ஆனால் ஏசு நாதரின் திருவருகை மற்றும் ஆண்டவனின் ஆட்சி நிறுவப்படுதல் எல்லாம் தானாகவே இறைவனின் அருளாலே நடக்கப் பெறாது. கிறிஸ்தவர்கள் முயன்று உலகைத் தயார்ப்படுத்தவேண்டும். அதாவது பொய்யான மதங்களையெல்லாம் களைந்து ஒரே ஓர் உண்மையான மதமான கிறிஸ்தவத்தைக் கொண்டு உலகைத் தூய்மைப்படுத்தவேண்டும். ஏசு நாதரின் மறுவருகைக்கு உலகைத் தகுதியானதாக வேண்டும்.

அனாபாப்டிஸ்டுகள் என்போர் புராட்டெஸ்டன்ட் கிறிஸ்தவர்கள். அவர்கள் மிகவும் கட்டுப்பாடு உடையவர்கள், எளிமையானவர்கள், முழுமையான சமயப்பற்று உடையவர்கள். இறையுணர்வு, சமயப்பற்று ஆகியவை காரணமாக அனாபாப்டிஸ்டுகள் பெரிதும் மதிக்கப்பட்டார்கள். அவர்கள் காலத்தில் கிறிஸ்தவ மதத்தில் நடந்துகொண்டிருந்த பல தவறான விஷயங்கள் அவர்களுக்கு வருத்தத்தைக் கொடுத்தன. கிறிஸ்தவர்கள் ஒழுக்க நெறி இன்றி, இறைப்பற்று இல்லாமல், விவிலிய நூல்களைச் சரிவரப் பின்பற்றாமல் இருக்கிறார்கள் என்று அனாபாப்டிஸ்டுகள் நினைத்தனர். இந்தக் காரணத்தால்தான் ஏசு கிறிஸ்து தன் இறையாட்சியை நிறுவ பூமிக்கு மறுவருகை தரவில்லை என்று அவர்கள் முழுமையாக நம்பினார்கள்.

ஆகவே சூழ்நிலையைச் சரிக்கட்ட ஒரு புரட்சிகரமான அணுகுமுறை தேவை என்று அவர்கள் நினைத்தனர். கிறிஸ்துவின் வருகை விரைவில் நடக்கப்போகும் நிகழ்வு; ஆனால் அது நடவாததற்குக் காரணம் கிறிஸ்தவர்கள் ஏசுவின் மறு வருகைக்குத் தகுதியாகும் அளவுக்கு நல்லொழுக்கத்தோடு இல்லை என்று அவர்கள் நம்பினார்கள். இந்த நம்பிக்கையின் அடிப்படையில் அரசாட்சியைப் பிடிக்க அவர்கள் முடிவு செய்தனர். 1534-ம் ஆண்டு வெஸ்ட்ஃபாலியாவில் உள்ள மன்ஸ்டர் நகரின் ஆட்சியை அனாபாப்டிஸ்டுகள் கைப்பற்றினர்.

அதிகாரத்தைக் கைப்பற்றியவுடன் கம்யூனிஸ்டுகள் என்னவெல்லாம் செய்தார்களோ அவற்றை மிகத் துல்லியமாக அனாபாப்டிஸ்டுகள் மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பே செய்தனர். விவிலிய நூல்களைத் தவிர மற்ற எல்லாவற்றையும் எரித்தனர். எல்லாச் சொத்துகளும், நம்பினால் நம்புங்கள் பெண்கள் உட்பட, சமூகத்தின் பொதுவுடைமை ஆக்கப்பட்டன. பலதார மணம் சட்டமாக்கப்பட்டது. தன்னுடையது மட்டுமே (பெண்கள் உட்பட) என்று ஒருவர் உடைமை பாராட்டினால் அது ஏசு கிறிஸ்துவின் வருகையைத் தாமதப்படுத்தும் என்பது அனாபாப்டிஸ்டுகளின் உறுதியான நம்பிக்கையாகும். (பொருள் மற்றும் மனிதர்கள்) உடைமை பற்றிய உணர்வு இல்லாத உலகமே முழுமையான உலகம். இப்படிப்பட்ட உலகுக்குத்தான் ஏசு கிறிஸ்து திரும்பி வருவார் என்பது அவர்கள் நம்பிக்கை. எல்லாம் பொதுவுக்குச் சொந்தமாக இருக்கவேண்டும். இதனால் தனிப்பட்ட உடைமை என்று ஏதும் இருக்கக்கூடாது.

எல்லாமே எல்லோருக்கும் கிடைக்கவேண்டும் என்ற அடிப்படையில் அனாபாப்டிஸ்டுகள் ஓராண்டு காலம் ஆட்சி செலுத்தினர். அதன்பின்னர் ராணுவத்தின் உதவியோடு லுத்தரன் சர்ச்சினால் முறியடிக்கப்பட்டனர்.

முந்தைய அனாபாப்டிஸ்டுகள், பிந்தைய கம்யூனிசம் இரண்டுக்கும் இடையே உள்ள ஒற்றுமைகளைப் பல ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. முற்றிலும் சமயமார்க்கமான அனாபாப்டிஸ்டுகள் அடைய விழைந்ததையும் அதை எந்த வகையில் செய்யவேண்டும் என்று முனைந்தார்களோ அதே குறிக்கோளையும் பொருள்முதல்வாத மார்க்சியமும் தனதாகக் கொண்டிருந்தது. மூன்று நூற்றாண்டுகளுக்கு முந்தைய அனாபாப்டிஸ்டுகளின் முன்மாதிரிகளையே மார்க்சியமும் பின்பற்றியது. கம்யூனிசக் கட்டமைப்பு, சித்தாந்தம் (கம்யூனிச ஊழியர்களுக்கான பயிற்சி உட்பட) மற்றும் கம்யூனிசத்தில் புரட்சிகரமான உட்பொருள் என எல்லாமே அனாபாப்டிஸ்டுகளிடமிருந்து தருவிக்கப்பட்டது என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


மனத்தில் கொள்ளவேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம், பொது யுகத்தின் தொடக்கத்திலிருந்தே ஐரோப்பா எங்கும் பெரும் குழப்பம், வன்முறை, போர்கள் என நிறைந்து இருந்தன. அங்கு கடந்த 2,000 வருடங்களில் மட்டுமே கிட்டத்தட்ட 100 கோடி மக்கள் இவற்றின் காரணமாகக் கொல்லப்பட்டுள்ளார்கள். இதில் 90 சதவீதக் கொலைகளுக்கு கிறிஸ்தவ உலகின் கருத்துகள், சித்தாந்தங்கள், கோட்பாடுகள் ஆகியவையும் அவற்றின் அடிப்படையில் செயல்பட்ட ஆதரவாளர்களுமே மூல காரணம். ஆக உள்ளுறை இறுக்கங்களையும் வலியையும் வெளிப்படுத்தும் சமுதாயமாக இருந்தது ஐரோப்பா. இப்படிப்பட்ட வன்முறை நிறைந்த கடந்த காலத்திலிருந்து விடுபடும் வலுக்கட்டாய முயற்சிதான் மார்க்சிய சித்தாந்தத்தை உருவாக்கியது.

மார்க்சிய சித்தாந்தம், தான் உருவான சூழலில் நிலைகொண்டிருந்த வன்முறை இழையைத் தொடர்ந்து நிகழ்த்தியது. ஆக, எப்போதும் குழப்பமும் இறுக்கமும் நிறைந்த சமுதாயத்தின் விளைபொருள்தான் கம்யூனிசம்.

கம்யூனிசத்தையும் அதன் வீழ்ச்சியையும் புரிந்துகொள்வதற்கு இந்த அறிதல் மிக முக்கியமானது.

***

மறைந்துபோன மார்க்சியமும் மங்கிவரும் மார்க்கெட்டும்
எஸ். குருமூர்த்தி
தமிழில்: வானமாமலை
இணையத்தில் வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-957-6.html
தொலைப்பேசி வழியாக வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 94459-01234

No comments:

Post a Comment