Search This Blog

Friday, January 6, 2012

பஞ்சம், படுகொலை, பேரழிவு: கம்யூனிஸம் + விலங்குப் பண்ணை





கம்யூனிஸம் மீதான இரு விமரிசனப் புத்தகங்களை இந்த ஆண்டு கிழக்கு பதிப்பகம் வெளியிடுகிறது.

ஒன்று 1945-ல் எழுதப்பட்டது. எழுதியவர் ஜார்ஜ் ஆர்வெல் என்ற புனைப்பெயர் கொண்ட பிரிட்டிஷ் எழுத்தாளர். அவர் எழுதிய புத்தகமான அனிமல் ஃபார்ம் என்பது, ஸ்டாலினிய ரஷ்யாவை நையாண்டி செய்த புத்தகம். கம்யூனிஸ ஆதரவாளர்களே ஸ்டாலினின் செயல்பாட்டால், அடக்குமுறையால் அதிர்ந்துபோயினர். ஜார்ஜ் ஆர்வெல்லின் விலங்குப் பண்ணையில், விலங்குகள் மனித அடக்குமுறைக்கு எதிராகப் போராடும். ஒரு குறிப்பிட்ட பண்ணையில், விலங்குகள் மனிதரைத் துரத்திவிட்டு ‘ஆட்சி’யைப் பிடிக்கவும் செய்யும். ஆனால் பின்னர் அந்த விலங்குகளில் பன்றிகள் மட்டும் பிறவற்றை அழுத்திக் கீழே தள்ளிவிட்டு தாம் மட்டும் சுகபோகத்தில் வாழும். மாற்றுக்குரல் எடுபடாமல் இருக்க, துரோகிப் பட்டம் கொடுத்துத் துரத்தும். படுகொலைகள் செய்யும். பஞ்சம் ஏற்படாவிட்டாலும் பசித் துயரம் ஏற்படும். சுரண்டல் அதிகரித்துக்கொண்டே போகும். ஒரு கட்டத்தில் பன்றிகள், தாம் எதிர்த்துப் போராடிய மனிதர்களுடனேயே கூட்டணி அமைத்துக்கொள்ளும். பிற விலங்குகளுக்கு, பன்றிக்கும் மனிதனுக்கும் வித்தியாசம் தெரியாமலேயே போய்விடும் என்பதாகக் கதையை முடித்திருப்பார் ஆர்வெல்.

இது ஏற்கெனவே தமிழில் பிறரால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்தக் குறிப்பிட்ட மொழிபெயர்ப்பைச் செய்திருப்பவர் பி.வி.ராமஸ்வாமி. இதுதான் இவரது முதல் மொழிபெயர்ப்பு. படித்துப் பாருங்கள். ஆச்சரியம் அடைவீர்கள். அடுத்த பதிவில் இந்தப் புத்தகத்திலிருந்து சில பகுதிகளைக் கொடுக்கிறேன்.

*

பஞ்சம், படுகொலை, பேரழிவு: கம்யூனிஸம் என்ற புத்தகத்தில் அரவிந்தன் நீலகண்டன், கம்யூனிஸம் அதன் அடிப்படையிலேயே அழிவைக் கொண்டிருக்கிறது என்று வாதிடுகிறார். மார்க்ஸிலிருந்து தொடங்கி, எங்கெல்ஸ் வழியாக, இன்றுவரை கம்யூனிஸம் எங்கெல்லாம் பேசப்பட்டுள்ளதோ, எங்கெல்லாம் செயல்முறையில் இருந்துள்ளதோ, அங்கெல்லாம் அது திரிந்து, அங்குள்ள மக்களுக்குப் பேரழிவைத் தவிர வேறு எதையும் கொடுத்ததில்லை என்பதை ஆதாரங்களுடன் விரிவாக எடுத்துக் காட்டியுள்ளார்.

பின்னர் ஒரு கேள்வி எழலாம். ஆனாலும் ஏன் பல நல்ல உள்ளங்களை கம்யூனிஸம் வசீகரிக்கிறது. சக மனிதனின் துன்பத்தையும் அவன் சுரண்டப்படுவதையும் எதிர்ப்பவர்கள்தானே கம்யூனிஸச் சித்தாந்தத்தால் வசீகரிக்கப்படுகிறார்கள்? ஆனால் அதன்பின் என்ன ஆகிறது? இதற்கான பதிலையும் அரவிந்தன் விளக்குகிறார்.

இந்தப் புத்தகமும் சர்ச்சையை எழுப்பும் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்த புத்தகத்தை இணையத்தில் வாங்க இதை சொடுக்கவும்.

No comments:

Post a Comment