Search This Blog

Friday, May 6, 2011

கிழக்கு மொட்டைமாடிக் கூட்டம் - அம்பேத்கரின் பொருளாதாரக் கொள்கைகள்

14 மே 2011, சனிக்கிழமை அன்று, சென்னை, ஆழ்வார்பேட்டை, கிழக்கு பதிப்பகம் மொட்டைமாடியில் மாலை 6.30 மணிக்கு பி.சந்திரசேகரன் ‘அம்பேத்கர் திறந்த பொருளாதாரக் கொள்கையை ஆதரித்தவரா?’ என்ற தலைப்பில் பேச உள்ளார்.

அம்பேத்கர் ஒரு வழக்கறிஞராக, சமூக சீர்திருத்தவாதியாக, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் குழுவில் முக்கியப் பங்கு வகித்தவராக ஆவதற்குமுன்பே ஒரு பொருளாதார நிபுணராக இருந்தவர். இன்று அவர் ஒரு தலித் தலைவராக மட்டுமே பார்க்கப்படுகிறார். ஆனால் பலரும் அவரை (தலித் சமூகத்தில் பிறந்த) பொருளாதார நிபுணர் என்று அவரைப் பார்ப்பதில்லை. அவரது பொருளாதாரக் கொள்கைகளைப் பற்றிப் பேசும் சிலர்கூட அவர் முதலாளித்துவத்துக்கு எதிரானவர் என்றும் சோசலிசம் பக்கம் சாய்ந்தவர் என்றுமே குறிப்பிடுகிறார்கள். அம்பேத்கரின் பொருளாதாரக் கொள்கைகள் இந்தியாவின் சோசலிச அரசியலுக்கு எதிராக இருக்கும் காரணத்தால், மைய நீரோட்டவாதிகள் அவற்றைப் பொருட்படுத்துவதில்லை; தலித்துகளோ அவற்றைத் தவறாகத் திரித்துவிடுகிறார்கள்.

பொருளாதாரச் சீர்திருத்தம் வேகமாக நடைபெற்றுவரும் இந்தியாவில் அம்பேத்கரின் பொருளாதாரக் கொள்கைகளை நாம் மீண்டும் படிப்பது அவசியமாகிறது. முக்கியமாக கட்டற்ற சந்தைக் கொள்கை, மையக்குவிப்பில்லாத வளர்ச்சிக்கான திட்டமிடுதல், சமூகம் எதிர்கொள்ளும் அறிவுசார் பிரச்னைகள், நாடுகளுக்கு இடையேயான நிதி தொடர்பான பிரச்னைகள் ஆகியவை கவனம் பெறத்தக்கவை.

இது தொடர்பான பல கருத்துகளை மையமாகக் கொண்டு பி. சந்திரசேகரன் சென்ற மாதம், லுட்விக் ஃபான் மீசஸ் இன்ஸ்டிட்யூட் நடத்திய ஆஸ்திரியன் நிபுணர்கள் மாநாடு 2011-ல் ஓர் ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்தார். அந்தக் கட்டுரை, அம்பேத்கரின் பொருளாதாரக் கொள்கைகள் பற்றிய தவறான கருத்துகள் பலவற்றையும் தகர்க்கிறது.

கிழக்கு மொட்டைமாடிக் கூட்டத்தில் சந்திரசேகரன் இந்தக் கருத்துகளை விரித்துப் பேச இருக்கிறார். பேச்சு தமிழில் இருக்கும்.

சந்திரசேகரன் விழுப்புரம் அருகில் பிறந்தவர். சென்னை பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பி.ஏ, எம்.ஏ பட்டங்களைப் பெற்றவர். 2005-ல், மோவில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சமூக அறிவியலுக்கான தேசியக் கழகத்தில் எம்.பில் பட்டம் பெற்றார். இவர் எழுதிய ‘வளரும் நாடுகளிலும் இந்தியாவிலும் உலகமயமாதலின் தாக்கம்’ என்ற கட்டுரை 2004-ம் ஆண்டில் பொருளாதாரத்துக்கான மொஃபாட் பரிசுக்காக (The 2004 Moffatt Prize in Economics (USA)) பரிந்துரைக்கப்பட்ட கட்டுரைகளில் ஒன்றாக இருந்தது. 2006-ம் ஆண்டில் அதிகம் படிக்கப்பட்ட 10 பொருளாதாரக் கட்டுரைகளில் இதுவும் ஒன்று என்று டாக்டர் மொஃபாட்டால் குறிப்பிடப்பட்டது.

தேசிய, சர்வதேச மாநாடுகள் பலவற்றில் பங்குபெற்றுள்ள இவர், பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார். அம்பேத்கர், ஹயெக், லுட்விக் ஃபான் மீசஸ், அம்பிராஜன் ஆகியோரின் எழுத்துகளின் தாக்கம் இவரிடம் உள்ளது. http://hayekorder.blogspot.com/ என்ற வலைப்பதிவில் எழுதிவருகிறார்.

-- பத்ரி சேஷாத்ரி

No comments:

Post a Comment